அண்ணாமலை பற்றி கேள்வி! கூல் டவுன்.. கூல் டவுன்.. அமைச்சர் சேகர்பாபுவை அமைதிப்படுத்திய தயாநிதி மாறன்!
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றிய கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்த அமைச்சர் சேகர்பாபுவை, கூல் டவுன், கூல் டவுன் எனக் கூறி சாந்தப்படுத்தினார் தயாநிதி மாறன் எம்.பி.
மேலும், அண்ணாமலைக்கு எல்லாம் தாம் பதிலளிக்க முடியாது எனக் கூறிய அவர் சிரிப்பை அடக்க முடியாமல் அடுத்தக் கேள்விக்கு பதிலளிக்கச் சென்றார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறினார்.

திசை திருப்பும் முயற்சி
மேலும், தற்போது பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து ஏழை எளிய நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருவதாகவும் அந்தப் பிரச்சனையை திசை திருப்பும் வகையில் நிலக்கரியை மாநிலங்களுக்கு அனுப்பாமல் மின் வெட்டு பிரச்சனையை மத்திய அரசு உருவாக்கி வருவதாகவும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டினார். மக்களின் கவனத்தை எவ்வாறு திசை திருப்பலாம் என்பதில் மட்டுமே மத்திய அரசு கவனமாக செயல்படுவதாக தெரிவித்தார்.

கொசு ஒழிப்பு
சென்னையை பொறுத்தவரை கொசு ஒழிப்பு பணிகளை துணை மேயர் மிகச் சிறப்பாக செய்து வருவதாக தயாநிதி மாறன் கூறினார். அப்போது அருகில் நின்ற அமைச்சர் சேகர்பாபு, மேயரும் எனக் கூறியதை தொடர்ந்து மேயரும் இந்தப் பணிகளை நன்கு செய்து வருவதாக சுதாரித்துக் கொண்டு கூறினார் தயாநிதி மாறன். இதனிடையே கமலாலயத்திற்கு வருவதற்கு தகுதி வேண்டும் என அண்ணாமலை கூறியிருப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

சேகர்பாபு பதில்
அதற்கு அண்ணாமலைக்கு எல்லாம் தாம் பதிலளிக்க முடியாது எனக் கூறியதுடன் நக்கல் சிரிப்பு ஒன்றையும் உதிர்த்தார். இதனிடையே அவரது அருகில் நின்ற அமைச்சர் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இருப்பதால் தான் மக்கள் அவரை வெற்றிபெற வைத்து சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியிருப்பதாகவும் அண்ணாமலைக்கு தகுதி இல்லாததால் தான் அவரை தேர்தலில் மக்கள் தோற்கடித்துள்ளார்கள் எனவும் பதிலளித்தார்.

கூல் டவுன்
மேலும், அண்ணாமலை விவகாரம் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆவேசமாக பேசத் தொடங்கியதும், அருகில் நின்று கொண்டிருந்த தயாநிதிமாறன் சிரிப்பை அடக்க முடியாமல் கூல் டவுன்.. கூல் டவுன்.. எனக் கூறி அமைச்சர் சேகர்பாபுவை சாந்தப்படுத்தி அழைத்துச்சென்றார்.












Click it and Unblock the Notifications