தமிழக பட்ஜெட் அறிக்கை மீதான விவாதம்…. சட்டசபையில் இன்று தொடக்கம்
சென்னை:தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கை மீதான விவாதம் சட்டசபையில் இன்று தொடங்குகிறது.
2019-20-ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை கடந்த 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதில், அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு நிதி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு நிதி என பல்வேறு விஷயங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் சபாநாயகர் தன பால் அவையை ஒத்தி வைத்தார்.
அதன்படி தமிழக நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று சட்டசபையில் தொடங்குகிறது. இன்று முதல் வரும் 13ம் தேதி வரை நடைபெற இருக்கும் விவாதத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேச இருக்கிறார்கள்.
இதனையடுத்து வரும் 14-ம் தேதி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விவாதத்தின் மீது பதிலளித்து பேச இருக்கிறார். இதில், விவசாயிகள் பிரச்னை, கஜா புயல் பாதிப்பு, ஆசிரியர்கள் போராட்டம் என பல விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.