மூளைவளர்ச்சி' இல்லாத காங்கிரஸ்... குஷ்புவுக்கு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு கண்டனம்!!
சென்னை: 'மூளைவளர்ச்சி' இல்லாத கட்சி காங்கிரஸ் என்று கூறியிருக்கும் நடிகை குஷ்புவுக்கு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து இருக்கும் நடிகை குஷ்பு இன்று டெல்லியில் இருந்து சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பின்னர் அங்கிருந்து பாஜக தலைமையகமான கமலாலயம் வந்தார், அங்கும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்த இரண்டு பேட்டிகளிலும், ''நான் இன்று பாஜகவில் இருப்பதற்கு முக்கிய காரணம் மாநில தலைவர் எல்.முருகன் தான். அவருக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.
ஒரு கட்சியின் தலைவர் தனது கட்சியால்தான் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்று தனது கட்சியில் சேருமாறு அழைப்பு விடுக்கிறார். மற்றொரு தலைவர் 6 ஆண்டுகளாக அந்த கட்சியில் இருந்த பின்னரும் வெறும் நடிகையாக மட்டுமே பார்ப்பதாக கூறுகிறார். கட்சியில் இருப்பவர்களுக்கும், வெளியேறுபவர்களுக்கும் அங்கு மரியாதை இல்லை. 'மூளைவளர்ச்சி' இல்லாத கட்சி காங்கிரஸ்.
முத்தலாக் கொண்டு வந்தபோதும் காங்கிரசில் இருந்து வாழ்த்தினேன். தமிழகத்தில் எனக்கு முன்பாக பாஜகவில் உழைத்து வருகிறார்கள். மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள். நான் உடனே போட்டியிட போவதாக கூற முடியாது'' என்று தெரிவித்து இருந்தார்.
பாஜக போட்டுவைத்திருக்கும் திட்டம்...குஷ்பு சேர்க்கப்பட்டதன் பின்னணி.. இனி பாருங்க ஆட்டத்தை!
'மூளைவளர்ச்சி' இல்லாத கட்சி காங்கிரஸ் என்று குஷ்பு கூறியிருப்பதற்கு டிசம்பர் 3 இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த இயக்கம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் மூளை வளர்ச்சி இல்லாதவர்களை சிறுமைப்படுத்துவது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளனர்.