காலையில் விவசாயம் பார்ப்பேன் ..மாலையில் தலைவர் பதவி வெங்காயம் மாதிரி- 'அண்ணா'மலை ஆட்டம் குளோஸ்?
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை முதல் அளித்து வரும் பேட்டிகள் விரக்தியின் வெளிப்பாடாக இருப்பதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்படலாம் என்பதை உணர்ந்து பேசுவதாக இருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அண்ணா திமுக விலகுவதாக அறிவித்தது. இது பாஜகவுக்கு தேசிய அளவில் பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அண்ணா திமுகதான் 2-வது பெரிய கட்சி. தென்னிந்தியாவில் பாஜக அணியில் இருக்கும் மிகப் பெரிய ஒரே கட்சி அதிமுக. இதனால் தேசிய அரசியலில் பாஜக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

அண்ணாமலைதான் காரணம்: அதிமுகவின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கடும் விமர்சனங்கள்தான் முதன்மை காரணம். குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என பகிரங்கமாக அண்ணாமலை அறிவித்ததை அக்கட்சியால் தாங்க முடியாமல் இந்த முடிவு எடுத்தது.
டெல்லி மேலிடம் திடீர் அழைப்பு: இதனைத் தொடர்ந்து டெல்லி பாஜக மேலிடம் அதிமுகவை சமாதானப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டது. அத்துடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டோரும் தமிழ்நாடு பாஜக தொடர்பான அறிக்கைகளை டெல்லி மேலிடத்தில் கொடுத்துள்ளனர். இதனால் அண்ணாமலையை உடனடியாக டெல்லிக்கு வருமாறு பாஜக மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. அதிமுகவை சமாதானப்படுத்த அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கும் முடிவில் டெல்லி மேலிடம் இருக்கிறதா? என்கிற சந்தேகத்தை இந்த திடீர் அழைப்பு எழுப்பி இருந்தது.
அரசியல் இல்லைன்னா விவசாயம்: இதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று அண்ணாமலை அளித்த பேட்டிகளில் விர்கதி தொனி வெளிப்பட்டதை சுட்டிக்காட்டுகின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். இன்று காலையில் பேட்டியளித்த அண்ணாமலை, அரசியலை விட்டுவிட்டால் நான் விவசாயம் பார்க்கப் போய்விடுவேன். கூட்டணி குறித்து எல்லாம் டெல்லி தலைமைதான் பேசும். முடிவெடுக்கும். ஒவ்வொரு கருத்துக்கும் எதிர் கருத்து சொல்லி கொண்டே இருந்தால் முடிவே இல்லாமல் போய்விடும். தமிழ்நாடு பாஜக தலைமையில் அதிகாரப் பரவலைக் கொண்டு வந்தேன் என புலம்பி இருந்ததையும் அந்த சீனியர் பத்திரிகையாளர்கள் கோடிட்டுக் காட்டுகின்றனர்.
வெங்காயம் மாதிரி மாநில தலைவர் பதவி: பின்னர் டெல்லி செல்லும் முன்பாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது. அதில் ஒன்றுமே இல்லை. அதாவது வெங்காயத்தை உரித்து பார்த்தால் உள்ளே ஒன்றுமே இருக்காது. அதுமாதிரிதான் மாநில தலைவர் பதவி. என்னிடம் அனுசரித்து செல்லும் பழக்கம் எல்லாம் கிடையாது. என்னை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டேன். பாஜகவை வலுப்படுத்தவே நான் முயற்சித்தேன். அதுவே என் நோக்கம் என கடும் விரக்தியாகவும் பேட்டி கொடுத்திருந்ததையும் மூத்த பத்திரிகையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆக அண்ணாமலை ஆட்டம் குளோஸா?












Click it and Unblock the Notifications