ஏதோ சரியில்லை.. அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் சொதப்பல்கள்.. யார் காரணம்? விசாரிக்கும் டெல்லி!
சென்னை: அதிமுக உள்ளேயும், அதிமுக பாஜக கூட்டணிக்கு இடையிலும் ஏற்பட்டு உள்ள மோதல் தொடர்பாக டெல்லி பாஜக தீவிரமாக கவனித்து வருகிறதாம். டெல்லி தலைமை இதில் விரைவில் நேரடியாக தலையிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அதிமுகவில் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், அடுத்த பத்து நாட்களுக்குள் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால், அவர்களுடன் இணைந்து கட்சியை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். தனது கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியுடன் பரப்புரைகளில் பங்கேற்பேன் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன் மோதல்
அனைவரையும் ஒன்றிணைத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும், இந்தக் கருத்தை அதிமுக பொதுச்செயலாளர் உணர வேண்டும் என்றும் செங்கோட்டையன் வலியுறுத்தினார். கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2016-க்குப் பிறகு தொடர்ச்சியாக பல தேர்தல்களில் தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டினார். மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 2024 மக்களவைத் தேர்தலில் 30 இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும் என வேலூர் எம்.பி. வேலூர் கூறியதையும் அவர் மேற்கோள் காட்டினார்.
கட்சி பலவீனமாக இருப்பதை எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததாகவும், பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் செங்கோட்டையன் கூறினார். "மறப்போம், மன்னிப்போம்" என்ற அணுகுமுறையைப் பின்பற்றுமாறு தான் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஓ பன்னீர்செல்வம் - டிடிவி முறைகேடு
இந்த பரபரப்பான அறிவிப்புகளுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனின் அனைத்து கட்சிப் பொறுப்புகளையும் பறித்துள்ளார். அவர் கட்சியிலிருந்து நீக்கப்படாமல், பொறுப்புகளில் இருந்து மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, இரண்டு நாட்களுக்கு முன்பு அமமுக தலைவர் டிடிவி தினகரன் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிய நிலையில், டிடிவி தினகரனின் இந்த விலகல் அதிமுக - பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. மதுரையில் இதுகுறித்து பேசிய டிடிவி தினகரன், "நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம். நாங்கள் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என பாஜக எப்படிச் சொல்லும்?" என்று கேள்வி எழுப்பினார்.
பாஜக காரணம் அல்ல
கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு பாஜக காரணம் அல்ல என்றும், தொண்டர்களின் முடிவின் காரணமாகவே தாங்கள் வெளியேறியதாகவும் தினகரன் கூறினார். அவசரமாக இந்த முடிவை எடுக்கவில்லை என்றும், நிதானமாகவே பாஜக கூட்டணியிலிருந்து விலகும் முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். அண்ணாமலை தேசிய ஜனநாயகக் கூட்டணியை சிறப்பாகக் கையாண்டதாகவும், ஆனால் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியைக் கையாளத் தெரியவில்லை என்றும் தினகரன் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியை ஓ. பன்னீர்செல்வம் சந்திக்காத விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் பதில் ஆணவமாக இருந்ததாகவும், ஓ.பி.எஸ். பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியதற்கு நயினாரின் செயல்பாடுகளே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த நிகழ்வுகள் அதிமுக கூட்டணியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிமுக மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தல், 2019 மற்றும் 2015 மக்களவைத் தேர்தல்களில் அதிமுக தென் மண்டலத்தில் கடுமையான சரிவை சந்தித்தது. முக்குலத்தோர் ஆதரவு வாக்குகள் இல்லாததே இந்த சரிவுக்குக் காரணம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இஸ்லாமிய முகம் விலகல்
மேலும், அதிமுகவின் முக்கிய இஸ்லாமிய முகங்களில் ஒருவரான அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜாவின் இந்த முடிவு அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் மாவட்டங்களில் அதிமுகவின் முக்கிய இஸ்லாமிய தலைவராக அன்வர் ராஜா கருதப்பட்டார். இஸ்லாமிய சமூகத்தில் அவருக்கு அரசியல் கடந்தும் பெரிய மதிப்பு இருந்தது.
அவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பதை கடுமையாக எதிர்த்து வந்தார். பாஜக கூட்டணியால் ஏற்கனவே பல இஸ்லாமியர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், அன்வர் ராஜா திமுகவில் இணைந்தது, எடப்பாடி பழனிசாமிக்கு மீதமிருக்கும் இஸ்லாமியர்களின் ஆதரவையும் இழக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் மோதல் காரணமாக முக்குலத்தோர் வாக்குகள் அவருக்கு கிடைப்பதில்லை.
உற்று கவனிக்கும் பாஜக
அதிமுக உள்ளேயும், அதிமுக பாஜக கூட்டணிக்கு இடையிலும் ஏற்பட்டு உள்ள மோதலால் தொடர்பாக டெல்லி பாஜக தீவிரமாக கவனித்து வருகிறதாம். டெல்லி தலைமை இதில் விரைவில் நேரடியாக தலையிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அதிமுக முக்குலத்தோர் வாக்குகளை இழந்து தென் மண்டலத்தில் கடுமையாக சிரமப்பட்டு வருகிறது. தற்போது இஸ்லாமியர்களின் வாக்குகளும் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. ஓ. பன்னீர்செல்வம் அணி பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. தலைமைக் கழக நிர்வாகிகளுடனான கூட்டத்திற்குப் பிறகு ஓ.பி.எஸ். ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி அளித்தார். தற்போது எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என அவர் அறிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ். அணியின் இந்த விலகலும் தென் மண்டலத்தில் அதிமுகவுக்கு பெரிய அடியாக இருக்கும். கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் நடந்த தொடர் சம்பவங்கள் அதிமுகவுக்கு ஒரு பெரிய எச்சரிக்கை மணியாக மாறி உள்ளன. குறிப்பாக தென் மண்டலத்தில் அதிமுக நிலைபெறுவதற்கு முன்பே, அங்கே மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.












Click it and Unblock the Notifications