சென்னை சிபிஐ அல்ல..டெல்லி சிபிஐ அதிகாரிகள்.. ராஜேந்திர பாலாஜி மீது நேரடியாக பாய்ந்த வழக்கின் பின்னணி
சென்னை: தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் கடந்த அதிமுக ஆட்சியில் 33 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சராக கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதன் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை சென்னை அலுவலக சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்யவில்லை என்றும் டெல்லியில் உள்ள சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்திருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
கடந்த 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி பதவி வகித்து வந்தார். இவர் தனது பதவிக் காலத்தில் ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 33 பேரிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் மீதும், அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது..

ஆனால் ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்ற அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்துவதால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதப்படுத்துகிறார்கள். எனவே இந்த வழக்கில் நியாயம் இப்போது வரை கிடைக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார்தாரர் ரவீந்திரன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால், தமிழக காவல்துறையிடம் இருந்து ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். ஆவினில் கடந்த அதிமுக ஆட்சியில் 33 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி, மாரியப்பன் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அடுத்த கட்டமாக அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை சென்னை அலுவலக சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்யவில்லை என்றும் டெல்லியில் உள்ள சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்திருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இதனிடையே முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப் பதிவுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்பு தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் கடந்த அதிமுக ஆட்சியில் 33 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆண்டுகள் பல கடந்தும் தமிழ்நாடு காவல்துறை, ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கினை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தால் இவ்வழக்கை விசாரிக்க காவல்துறைக்கு விருப்பம் இல்லை என அதிருப்தி தெரிவித்து சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது சிபிஐ 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications