சொந்த காசில் சூனியம்! சட்டென இந்த பக்கம் சாய்ந்த டெல்லி! அதிமுகவில் யாருக்கு சப்போர்ட்? பரபர பின்னணி
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு வீரியமடைந்து வரும் நிலையில் டெல்லி தலைமையின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பாஜகவுடன் ஒரு போதும் கூட்டணி வைக்காமல் இருந்து வந்தார். பிரதமர் மோடி ஜெயலலிதாவுடைய நண்பன் என்றாலும் கட்சி என வரும்போது ஜெயலலிதா மன உறுதியுடன் மோடியா லேடியா என முழங்கினார்.
அவர் மறைவுக்கு பின்னர் அதிமுகவை டெல்லி தலைமை ஆட்சி படைத்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அதிமுக இரு அணிகளாக உடைந்து பின்னர் சசிகலா, டிடிவி தினகரனை நீக்கிவிட்டு ஒன்றிணைந்தனர்.

துணை முதல்வர்
அப்போது துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்க ஆளுநர் மாளிகைக்கு சென்ற போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ், ஒரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமியின் கையையும் மறுபக்கம் ஓ பன்னீர் செல்வத்தின் கையையும் பிடித்து சேர்த்து வைத்தார். இதன் பின்னணி குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி
இந்த நிலையில் கட்சியில் எப்போது பிரச்சினை என்றாலும் எடப்பாடி பழனிச்சாமியும் சரி, ஓ பன்னீர் செல்வமும் சரி டெல்லி தலைமையை நேரில் சந்தித்து முறையிடும் வழக்கத்தை வைத்திருந்ததாகவே சொல்லப்பட்டது. ஒவ்வொரு முறையும் அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்கள், இது எம்ஜிஆருக்கு ஜெயலலிதாவுக்கும் செய்யும் துரோகம் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.

அதிமுக ஆட்சி
அது போல் அதிமுக ஆட்சியில் இருந்தவரை மத்திய அரசின் திட்டங்களுக்கு தீவிரமாக எதிர்த்ததும் இல்லை என்ற விமர்சனமும் அதிமுக மீது உண்டு. இந்த நிலையில் தற்போது ஒற்றைத் தலைமை என்ற பேச்சு விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

பிரதமர் மோடி
அப்போது அவர் ஒரு விஷயத்தை போட்டு உடைத்தார். அதில் பிரதமர் மோடியின் அழுத்தத்தின் பேரில் துணை முதல்வராக பதவியேற்றேன். மற்றபடி எனக்கு பதவி ஆசை இல்லை என்றார். அதிமுகவுக்கு பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே கூறி வந்த நிலையில் தன்னை துணை முதல்வராக்கியது பிரதமர்தான் என ஓபிஎஸ் போட்டு உடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2021 சட்டசபை தேர்தல்
இது ஒரு புறமிருக்க, சசிகலாவை கட்சியில் சேர்த்து கொள்வது குறித்தும் கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது டெல்லி தலைமை அதிமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. அது போல் டெல்லி பாஜக கிரீன் சிக்னல் கொடுத்தால் அதிமுக சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்ளும் என்றெல்லாம் பேசப்பட்டது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை
இந்த நிலையில் தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சு உருவாகியுள்ளது. இதில் டெல்லி தலைமையின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிச்சாமியும் டெல்லி தலைமையுடன் நெருக்கமாகவே இருக்கிறார்கள். தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமையில் தீவிரம்காட்டி வருகிறார்.

ஓபிஎஸ் இரட்டைத் தலைமை
ஓபிஎஸ் இரட்டைத் தலைமையை விரும்புகிறார். அதே வேளையில் கட்சியை எந்த நேரத்திலும் இபிஎஸ்ஸுக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணமும் அவருக்கு இருக்கிறது. டெல்லி தலைமையின் நிலை குறித்து அரசியல் விமர்சகர்களிடம் கேட்ட போது இரட்டை தலைமையை டெல்லி தலைமை ஆதரித்தது. அது உங்களுக்கே தெரியும்.

ஒற்றைத் தலைமை வந்தால்
அது போல் ஒற்றைத் தலைமை என வந்தால் ஓபிஎஸ்ஸுக்குத்தான் டெல்லி தலைமை ஆதரவு தர வேண்டும். ஓபிஎஸ்ஸின் தியாகம் என்ன என்பது டெல்லி தலைமைக்கும் தெரியும். அப்படியிருக்கும் போது கட்சியை எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுப்பதற்கு டெல்லி தலைமை எப்போது ஆதரவு தராது என்றே கருதுகிறோம். மேலும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் அதிமுக தோல்வி அடைந்தது என வெளிப்படையாக பேசியதில் டெல்லி தலைமைக்கு கோபம் இருக்கிறது. இதனால் ஓபிஎஸ்ஸுக்கே டெல்லி தலைமை ஆதரவு அளிக்கும் என்கிறார்கள். மேலும் சில விமர்சகர்கள் கூறுகையில் துணை முதல்வராகுமாறு எனக்கு அழுத்தம் கொடுத்ததே பிரதமர் மோடிதான் என மீடியா முன்பு ஓபிஎஸ் வெளிப்படையாக கூறியதால் டெல்லி தலைமை அவர் மீது கடுங்கோபத்தில் இருக்கிறது. இதனால நிச்சயம் ஓபிஎஸ்ஸை டெல்லி தலைமை ஆதரிக்காது என்கிறார்கள். இதுகுறித்து பாஜக நிர்வாகிகளிடம் கேட்ட போது , இது அதிமுகவின் உள்கட்சி பிரச்சினை, இதில் சம்பந்தமே இல்லாமல் பாஜகவை ஏன் இழுக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.












Click it and Unblock the Notifications