"M-Sand, கருங்கல் ஜல்லி விலையை கட்டுப்படுத்த முடியாது".. ஒரே போடு போட்ட கனிமவளத் துறை
சென்னை: வீடு, அலுவலகம், அடுக்குமாடிக் கட்டடங்கள் போன்ற அனைத்து கட்டுமானங்களுக்கும் எம்-சாண்ட் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதன் விலையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எம்-சாண்ட் மற்றும் கருங்கல் ஜல்லி விலையை கட்டுப்படுத்தவே முடியாது என்று கனிமவளத் துறை தெரிவித்துள்ளது.
ஆற்று மணல் தற்போது கிடைக்காத நிலையில், வீடு, கட்டடம், அலுவலகம் போன்ற கட்டுமானங்களுக்கு எம் சாண்ட் தான் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆலைகளில் கருங்கள்கள் உடைக்கப்பட்டு எம் சாண்ட் தயாரிக்கப்படுகிறது. எம் சாண்ட், கருங்கல் ஜல்லி விலையும் தற்போது கணிசமாக குவாரி உரிமையாளர்கள் உயர்த்தி வருகின்றனர். இதனால், கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்ப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து, எம் சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழக மணல், எம்சாண்ட் லாரி உரிமையாளர்களின் ஒருங்கிணைந்த நல சம்மேளனம் சார்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கனிமவளத் துறைக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிம வளத்துறை துணை இயக்குநர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், எம்-சாண்ட் தயாரிப்பில் கருங்கற்கள் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றன. இதில், அடிப்படை தயாரிப்பு செலவு, ஒவ்வொரு பகுதிகளுக்கும் மாறுபகிறது. கருங்கற்களை துகள்களாக உடைப்பது, சுத்தப்படுத்துவது போன்ற நிலைகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான செலவும் அதிகமாகிறது.
இதுமட்டுமல்லாமல் கையாளுதல், இருப்பு வைத்தல், போக்குவரத்து செலவுகள், ஜி.எஸ்.டி., லாபம் போன்றவையே எம் - சாண்ட் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில், சட்ட விரோதமாக கருங்கற்களை வெட்டி எடுப்பது உள்ளிட்ட பணிகளை தடுக்க, சட்ட விதிகள், 2011 இல் ஏற்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையில், எம் - சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த, அரசுக்கு வழிவகை இல்லை. சட்டவிரோதமாக எம் - சாண்ட் தயாரிப்பது, விற்பதை வேண்டுமானால் கட்டுப்படுத்தலாம். ஆனால், எம் - சாண்ட் விலையை கட்டுப்படுத்த வழி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக மணல், எம்-சாண்ட் லாரி உரிமையாளர்களின் ஒருங்கிணைந்த நல சம்மேளன தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் கூறுகையில், எம்-சாண்டின் விலையை கட்டுப்படுத்த முடியாது என்று கனிமவளத் துறை கூறியுள்ளது மேலோட்டமான பார்வையாக உள்ளது. எம்-சாண்ட் தயாரிப்பதற்கான மூலப்பொருளான கருங்கற்கள் விலையை அரசு தான் நிர்ணயிக்கிறது. எம்-சாண்ட் தயாரிப்பதற்கான விதிமுறைகளை முழுமையாக அதிகாரிகள் படித்தால், விலையை குறைக்க வழி தெரியவரும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications