அடுத்த மாதம் மொரீஷியஸ் செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்... எம்.ஜி.ஆர்.சிலை திறப்பு நிகழ்ச்சி
சென்னை: மொரீஷியஸ் நாட்டில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர்.சிலையை திறந்து வைப்பதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்த மாதம் அங்கு செல்லவுள்ளார்.
மொரீஷியஸின் கோரமண்டல் நகரில் அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின். சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர். சிலை அங்கு நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

3 எழுத்து
மூன்றெழுத்து மந்திரச் சொல்லான எம்.ஜி.ஆரின் புகழை பாடும் வண்ணம் அவருக்கு சிலை நிறுவுவதும், அவரது பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்ச்சிகளை நடத்துவதும் தமிழகம் மட்டுமன்றி கடல் கடந்தும் தமிழர்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

எம்.ஜி.ஆர் சிலை
இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக மொரீஷியஸ் நாட்டில் எம்.ஜி.ஆர் சிலை நிறுவப்பட்டிருப்பதை கூறலாம். மொரீஷியஸின் கோரமன்டல் நகர் என்பது மிக முக்கியமான ஒரு சுற்றுலா இடமாகும். அந்த இடத்தில் எம்.ஜி.ஆருக்கு சிலை நிறுவி அவரை பெருமைப்படுத்தியுள்ளார் அந்நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி.

பரமசிவம் அழைப்பு
இதனிடையே தான் நிறுவிய எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைக்க வேண்டும் என பரமசிவம் பிள்ளை வையாபுரி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். அவரும் சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த பின்னர் மொரீஷியஸ் சென்று எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகள்
மொரீஷியஸ் தீவு சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரி எனக் கூறப்படும் நிலையில், உலகின் பல பகுதிகளில் இருந்தும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் எம்.ஜி.ஆரை பற்றி அறிந்துக்கொள்ளும் வகையில் சிலைக்கு கீழ் அவர் செய்த சாதனைகளும், பெருமைகளும் அடங்கிய கல்வெட்டும் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications