பஸ் ஸ்டிரைக் தொடங்கியது.. சென்னை பேருந்துகள் ஓடுகிறதா.. காலை வேலைக்கு செல்லும் மக்கள் நிலை என்ன
சென்னை: இன்று காலை முதலே போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதேநேரத்தில் தலைநகர் சென்னையில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 23 போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் என ஆறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

இந்த விவகாரத்தில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இரண்டிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே பொங்கலுக்கு முன்னதாக இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.
இதற்கிடையே நேற்று சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இருப்பினும், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. தமிழக அரசு தங்கள் கோரிக்கைகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றத் தயாராக இல்லை என்றும் ஸ்டிரைக் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவித்து இருந்தது. பேச்சுவார்த்தை தோல்வி என்பது தெரிந்தது முதலே பஸ் சேவை படிப்படியாகக் குறைந்தது.
இன்று காலை முதல் பல இடங்களில் வழக்கமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான ஊர்களில் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி உள்ளன. குறிப்பாக நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்து சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் சென்னையில் பல இடங்களில் பேருந்துகள் வழக்கம் போலவே இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில பணிமனைகளில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சென்னை நகரைப் பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் ஒரு சில பேருந்துகளைத் தவிர மற்ற பேருந்துகள் வழக்கம் போலவே இயங்குகிறது. இதற்கிடையே இன்று அனைத்து பணிமனைகளில் இருந்து அனைத்து வழித்தடங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருவதாக எம்டிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து எம்டிசி நிர்வாகம் தங்கள் எக்ஸ் பக்கத்தில், "மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று அனைத்து பணிமனைகளில் இருந்து அனைத்து வழித்தடங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருவதனை, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், அதிகாலையிலே அனைத்து பணிமனைகளுக்கும் சென்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்" என்று பதிவிடப்பட்டுள்ளது.
அதேபோல சென்னையில் இன்று காலை நிலவரப்படி 2,098 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ள எம்.டி,சி பொது மேலாளர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு பேருந்துகளில் பொதுமக்கள் அச்சமின்றி பயணிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications