துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு.. தமிழக அரசின் எதிர்ப்பை மீறி யுஜிசி உறுப்பினரை சேர்த்த ஆளுநர் ரவி!
சென்னை: சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் எதிர்ப்பை மீறி யுஜிசி சார்பில் உறுப்பினரையும் இந்தக் குழுக்களில் சேர்த்து ஆளுநர் ரவி நியமித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்ய கமிட்டி அமைத்து ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்டார். ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் தலா நான்கு உறுப்பினர்களை கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் முறையாக யுஜிசியின் பிரதிநிதி துணை வேந்தர்கள் நியமன தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர்கள் கட்டாயம் இல்லை என தமிழ்நாடு அரசு நேற்று ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது தமிழக அரசின் எதிர்ப்பை மீறி, தேர்வு குழுவில் யுஜிசியின் பிரதிநிதியை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழம்: தமிழக ஆளுநரின் பிரதிநியாக, கர்நாடக மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பட்டு சத்யநாராயணாவும், சிண்டிகேட் பிரதிநிதியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், மாநில திட்டக் குழுவின் உறுபினருமான கே.தீனபந்துவும், பல்கலைக்கழக செனட் பிரதிநிதியாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பி.ஜெகதீசனும், யுஜிசி பிரதிநிதியாக, தெற்கு பீகார் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஹெச்சிஎஸ் ரத்தோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்வியியல் பல்கலைக்கழகம்: தமிழக ஆளுநரின் பிரதிநியாக, யுஜிசி உறுப்பினர் பேராசிரியர் சுஷ்மா யாதவாவும், தமிழக அரசின் பிரதிநிதியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீனும், பல்கலைக்கழக செனட் பிரதிநிதியாக தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டி.பத்மநாபனும், யுஜிசி பிரதிநிதியாக, தெற்கு பிஹார் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஹெச்சிஎஸ் ரத்தோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகம்: தமிழக அரசின் பிரதிநிதியாக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பிடபிள்யூசி.டாவிதாரும், பல்கலைக்கழக சிண்டிகேட் பிரதிநிதியாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பி.துரைசாமியும், பல்கலைக்கழக செனட் பிரதிநியாக பாரதியார் பல்கலை. மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஜி.திருவாசகமும், யுஜிசி பிரதிநிதியாக, பெங்களூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பி.திம்மேகவுடாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு 3 பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கு 4 பேர் அடங்கிய தனித்தனிக் குழுக்களை அமைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்காக துணைவேந்தர் பணியிடங்களுக்கு மூவரது பெயரை பரிந்துரைக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications