ஓபிஎஸ் க்கு நியாயம் கேட்கும் முக்குலத்தோர் சமுதாய அமைப்புகள்! இன உணர்வுடன் திரளுமாறு போஸ்டர்கள்!
சென்னை: ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக முக்குலத்தோர் சமுதாய அமைப்பினர் அணி திரளத் தொடங்கியுள்ளனர்.
Recommended Video
மறவர் மகாஜன சபை, முக்குலத்தோர் உறவின் முறை என்ற பெயர்களில் தென் மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரும் 30-ஆம் தேதி ராஜபாளையத்திலும், 3-ஆம் தேதி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலும் ஓ.பி.எஸ்.க்கு நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன.
இந்த முறை பொறுப்பு யாருக்கு? ஓபிஎஸ் குடைச்சலுக்கு மத்தியில் எடப்பாடியின் ஒரே குறி.. இன்றும் மீட்டிங்
அதிகாரச் சண்டை
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி -ஓ.பன்னீர்செல்வம் இடையே நடைபெற்று வரும் அதிகாரச் சண்டை இருபெரும் சமுதாயத்துக்கு இடையே மனக்கசப்புகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கடந்த வாரம் ''தேவரினமே விழித்துக்கொள்'' என்ற பெயரில் திருப்பூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில் முக்குலத்தோர் உறவின் முறை என்ற பெயரில் மதுரை மாவட்டம் சோழவந்தான், வாடிப்பட்டி பகுதிகளிலும், மறவர் மகாஜன சபை என்ற பெயரில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கண்டன ஆர்ப்பாட்டம்
அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி வரும் 30-ஆம் தேதி மற்றும் 3-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அந்த போஸ்டர்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. முத்துராமலிங்கத் தேவர், மருது சகோதரர்கள், மூக்கையா தேவர் ஆகியோர் படங்களுடன் ஜெயலலிதா படமும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.
இன உணர்வு
ஓ.பன்னீர்செல்வத்துக்கு நியாயம் கேட்டு நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இன உணர்வுடன் சமுதாயத்தினர் திரண்டு வர வேண்டும் என மறவர் மகாஜன சபையும், முக்குலத்தோர் உறவின் முறை அமைப்பும் அழைப்பு விடுத்துள்ளது. தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஒட்டப்பட்டு வரும் இது போன்ற போஸ்டர்களால் அதிமுகவில் அடுத்தடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. குறிப்பாக அதிமுகவில் உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இந்த விவகாரத்தை எப்படி கையாளப் போகிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
துரோகம் உதயகுமார்
தேவர் சமுதாயத்தில் பிறந்து தேவர் சமுதாயத்திற்கே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துரோகம் செய்துவிட்டதாக கணேசத் தேவர் என்பவர் கடந்த வாரம் கடுமையான முறையில் போஸ்டர் ஒன்று ஒட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இரு தனி நபர்களுக்கு இடையேயான ஈகோவால் இரு பெரும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் கசப்புணர்வு அதிகரித்து வருகிறது.