பெண் எஸ்.பி பாலியல் புகார்: 'வெலவெல' நிலையில் டிஜிபி ராஜேஷ் தாஸ்.. தனி அறையில் விசாரணை
சென்னை: பெண் எஸ்.பி. பாலியல் புகாரின் அடிப்படையில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜரானார்.
தமிழக கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் புகார் அளித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் மீது ஒரு எஸ்.பி.யே பாலியல் புகார் அளித்ததால், விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பெண் எஸ்.பி. அளித்த புகாரை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்றம் திவீரமாக கண்காணிக்கும் என்றும், விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் முன்னரே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, "குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், "சிறப்பு டி.ஜி.பி. மீது புகார் கொடுக்க வந்த பெண் அதிகாரியை தடுத்தார் என்பதற்காக எஸ்.பி.யை மட்டும் சஸ்பெண்ட் செய்தது ஏன்?" என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை மார்ச் 16 ஆம் தேதி தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில், பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரானார். இதற்காக காலையிலேயே சிபிசிஐடி அலுவகம் வந்த அதிகாரி ராஜேஷ் தாஸ், கொஞ்சம் கூட இங்கும், அங்கும் திரும்பாமல் விறுவிறுவென அலுவலகத்திற்குள் சென்றுவிட்டார்.
அங்கு தனி அறையில், அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்படுகிறது.