சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனையா? - பொய்யான குற்றச்சாட்டு என டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்!
சென்னை : பள்ளிச் சிறுமிகளை, மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டிய நிலையில், இது முழுக்க முழுக்கப் பொய்யான குற்றச்சாட்டு என டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்திருந்தார். அதில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்ததாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், பழிவாங்கும் வகையில், சமூக நலத்துறை அதிகாரிகள், தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் கூறியிருந்தார். மேலும், ஆறாம், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை, மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, தடை செய்யப்பட்ட இரண்டு விரல் பரிசோதனை என்னும் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து முதலமைச்சருக்கு, தான் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிறுமிகளிடம் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டது என்பது முழுக்க, முழுக்க பொய்யான குற்றச்சாட்டு என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பழிவாங்கும் நோக்குடன் சமூக நலத்துறை அதிகாரிகள் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது குழந்தை திருமண குற்றச்சாட்டுகள் வைத்ததாகவும், அதன் அடிப்படையில் உறவினர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும், 6 -7ஆவது வகுப்பு மாணவியர் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மருத்துவமனையில் கன்னி பரிசோதனை செய்ததாகவும், இதனால் சிறுமியர் சிலர் தற்கொலை செய்ய முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றன. இவை முற்றிலும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் ஆகும்.
குழந்தைத் திருமணம் நடந்ததாக புகார்கள் வந்த நிலையில் அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்த பின்னர் அதற்கான ஆதாரங்களை திரட்டிய பின்பு சிதம்பரம் டவுன் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் சட்டப் பிரிவு 366(A) இந்திய தண்டனை சட்டம் மற்றும் குழந்தை திருமண சட்டப் பிரிவு 9, 10இன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றத்தில் தொடர்புடைய 6 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி இரண்டு சிறுமிகள் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடம் பெண் மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர். ஆனால், அவர்களை இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அந்தச் சிறுமியர் தற்கொலை செய்ய முயன்றனர் என்பதும் பொய்யான தகவல். அது போன்ற நிகழ்வு நடந்ததாக தகவல் இல்லை.
நான்கு குழந்தை திருமணங்கள் நடந்தது உண்மை என்பதற்கு ஆதாரங்கள் இருந்தன என்பதால் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், சிறுமிகளிடம் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டது என்பது முழுக்க, முழுக்க பொய்யான குற்றச்சாட்டு ஆகும். இதனால் சிறுமியர் சிலர் தற்கொலை செய்ய முயன்றனர் என்பதும் பொய்யான குற்றச்சாட்டு என்பதை காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications