“நான் இருக்கேன்மா..” கதறி அழுத ரோபோ சங்கரின் மகளை தேற்றிய தனுஷ்!
சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், நேற்று சிசிக்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு திரைக்கலைஞர்கள், ரசிகர்கள் என அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த சில நாட்களாக கடுமையான உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் விஜய் டிவி செட்டில் ரோபோ சங்கர் மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவரது மருத்துவ நிலைமை குறித்து, மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "ரோபோ சங்கர், செப். 16 அன்று மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு குடலில் ரத்தப் போக்கு இருந்தது. மேலும் உள் உறுப்புகள் செயலிழந்த நிலையில் வயிற்றுப்பகுதியிலும் மிக தீவிரமான பிரச்சனைகள் இருந்தன. தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு எங்கள் மருத்துவர்கள் தொடர்ந்த சிகிச்சை அளித்த போதிலும் பலன் அளிக்கவில்லை. செப் 18 அன்று இரவு 9.05 மணிக்கு உயிரிழந்தார்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரோபோ சங்கரின் உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இவரை தொடர்ந்து திரை நட்சத்திரங்கள் பலரும் அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர். குறிப்பாக தனுஷ் அஞ்சலி செலுத்த வந்தபோது, ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர், தனுஷின் தோள் மீது சாய்ந்து கதறி அழுதார். "நான் இருக்கேன்மா பார்த்துக்கொள்கிறேன்" என்று தனுஷ் இந்திரஜா சங்கருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.













Click it and Unblock the Notifications