பாமக ஒன்றியச் செயலாளர்களை வளைத்த திமுக... சத்தமின்றி காய்நகர்த்திய செந்தில்குமார் எம்.பி..!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ஒன்றியச் செயலாளர்கள் 3 பேர் உட்பட இன்னும் பல முக்கிய நிர்வாகிகளை திமுகவில் இணைத்து அன்புமணி ராமதாஸூக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார் செந்தில்குமார் எம்.பி.
தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரை பாமகவின் கோட்டையாக கருதப்படும் நிலையில், அந்த மாவட்டத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள் அக்கட்சிய்லிருந்து விலகியிருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பாமகவிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்த நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்தில் வைத்து வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தருமபுரி மாவட்டம்
தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. கிராம அளவில் கட்சிக்கு அமைப்புகள் உள்ளதால் பாமக ஓரளவு செல்வாக்குடன் இந்த மாவட்டத்தில் திகழ்கிறது. இதனால் தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட, அதிமுக-பாமக கூட்டணி இந்த மாவட்டத்தில் மொத்த தொகுதிகளையும் கைப்பற்றியது. திமுக இந்த மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாதது குறிப்பிடத்தக்கது.

திமுகவில் இணைந்தனர்
இந்நிலையில் தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் மூலம் பாமக முன்னாள் தருமபுரி மாவட்டச் செயலாளர் சத்தியமூர்த்தி மற்றும் பாப்பிரெட்டிபட்டி வடக்கு ஒன்றியச் செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான விஜயன், பாப்பிரெட்டிபட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் வெங்கடேசன், அரூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினை சென்னையில் நேரில் சந்தித்து தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

செந்தில்குமார் எம்.பி.
இதுமட்டுமல்லாமல் பாப்பிரெட்டிபட்டி மற்றும் அரூர் ஆகிய இரண்டு ஒன்றியங்களை சேர்ந்த பாமகவின் சார்பு அணி நிர்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து திமுகவுக்கு அழைத்து வந்தவர் தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார். கடந்த சட்டமன்றத் தேர்தல் முதலே இந்த பணியை தொடங்கிய அவர் இப்போது ஒரு வழியாக தனது அசைன்மெண்டை முடித்துவிட்டார்.

ஒன்றியச் செயலாளர்கள்
இதனிடையே ஏற்கனவே பாமகவினரும் செந்தில்குமார் எம்.பி.யும் சமூக வலைதளங்களில் வார்த்தைப் போர் நடத்தி வரும் நிலையில், இந்த நிகழ்வு அதை மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒன்றியச் செயலாளர்கள் ஒரு கட்சியை விட்டு விலகுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. இதனால் இதனை தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொண்ட பாமக தலைமை, திமுகவுக்கு அரசியல் பதிலடி கொடுக்க காத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications