''கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு அவங்க அப்பா பெயரை வைக்கணுமா?'' சீமான் மீது தயாநிதி மாறன் பாய்ச்சல்!
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு கருணாநிதியின் பெயரை சூட்டியதற்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, ''ஏன் அவங்க அப்பா பெயரை வைக்கணுமா?'' என தயாநிதி மாறான் காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
கருணாநிதி என்பவர் யார் என்பதை சீமான் முதலில் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும் தமிழ்நாடு இன்று இந்தளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணமே கருணாநிதி தான் என்றும் பின் தங்கியவர்களும் படித்து பதவியில் இருப்பதற்கு கருணாநிதி தான் காரணம் எனவும் கூறினார். தமிழ்நாட்டில் சமத்துவத்தை உருவாக்கியவர் கருணாநிதி என்றும் அவர் பெயரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு சூட்டாமல் வேறு யார் பெயரை சூட்டுவது என வினவினார்.

சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு கடந்த வாரம் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கருணாநிதி நூற்றாண்டு முனையம் என கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் இப்போது அதை வைத்து விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 2 அடித்தளம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் நவீன வசதிகளுடன் கூடிய பிரதான கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் 2,769 இருசக்கர வாகனங்கள், 324 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இட வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தரைத்தளத்தில் 53 கடைகள், 2 உணவகங்கள், 2 துரித உணவகங்கள், அவசர சிகிச்சை மையம், மருந்தகம் பொருள் பாதுகாப்பு அறை, தாய்ப்பாலூட்டும் அறை, பயணச்சீட்டு வழங்கும் இடம், பணம் எடுக்கும் இயந்திரம், நேரக்காப்பாளர் அறை, கண்காணிப்பு கேமரா அறை, பொது கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் இவைகள் எல்லாம் முழுமையாக இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை என்பதும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு எல்லா வசதிகளும் பயன்பாட்டுக்கு வரக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications