"அப்பாயிண்ட்மென்ட்டே தரல".. பிரதமருடன் ரொம்ப நேரம் பேசினாராமே எடப்பாடி.. போட்டுடைத்த சீனியர்.. ஓஹோ
எடப்பாடி பழனிசாமி பிரதமரை டெல்லியில் சந்தித்து பேசியதாக வேலுமணி தெரிவித்துள்ளார்
சென்னை: எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் பிரதமரை அதிக நேரம் சந்தித்து பேசியதாக மாஜி அமைச்சர் எஸ்பி வேலுமணி, தெரிவித்துள்ளது, புது குழப்பத்தை கட்சிக்குள் ஏற்படுத்தி வருகிறது.
குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.. திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்தையும் தெரிவித்தார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழா, திரௌபதி முர்முவின் பதவியேற்பு விழா போன்றவற்றில் கலந்து கொள்வதற்காகவே எடப்பாடி டெல்லி சென்றதாக கூறப்பட்டாலும், இதற்கு வேறு கணக்குகளும் கூறப்பட்டன.

எடப்பாடி பிளான்
அன்று, குடியரசு தலைவருக்கான வேட்பு மனு தாக்கலின்போது, தன் சார்பாக தம்பிதுரையை அனுப்பிவிட்டு சென்னையிலேயே இருந்தவர்தான் எடப்பாடி பழனிசாமி.. ஆனால், இந்த முறை அவரே நேரடியாக டெல்லிக்கு சென்றார் என்பதால், ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும் நிலவின.. குறிப்பாக, ஓபிஎஸ் கோரிக்கை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு விட்டால் என்ன செய்வது? இலை முடங்கினால், தன் நிலை என்னாவது? போன்ற கலங்கடிக்கும் கேள்விகள் அவரை சுற்றி வட்டமடித்தன...

மேலிடம் - கணக்கு
மற்றொரு புறம் தனக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் நடக்கும் ரெய்டுகள், குட்கா கேஸில் சிபிஐ தீவிரம், போன்றவையும் எடப்பாடிக்கு செக் வைத்துவிட்ட நிலையில், நேரடியாகவே டெல்லி சென்று மேலிடத்திடம் பேசினதால்தான் சரியாகும் என்று பல கணக்குகளுடன் சென்றார். ஆனால், பாஜகவுக்கு எதிரான எடப்பாடியின் சமீபகால நடவடிக்கைகளால், மேலிடம் அதிருப்தி கொண்டிருப்பதாக தெரிகிறது.. மேலும், ஓபிஎஸ் - எடப்பாடி இருவரையும் இணைக்கும் முயற்சியில் இருப்பதாகவும் தெரிகிறது..

அப்பாயிண்ட்மென்ட்
எனவே, எடப்பாடியை மட்டும் தனியாக சந்திக்க விரும்பாத மேலிடம், அப்பாயிண்மென்ட் கேட்டும் எடப்பாடிக்கு தரவில்லை என தெரிகிறது.. எனவே, தன்னுடைய 5 நாள் பயணத்தை வெறும் 2 நாளிலேயே முடித்து கொண்டு எடப்பாடி ஊர் திரும்பியது சலசலப்பை கூட்டியது. இது ஓபிஸ் தரப்புக்கு நிம்மதியை தந்தாலும், பலவித சந்தேகங்களையும் அரசியல் களத்தில் ஏற்படுத்தியது.. இதை ஜெயக்குமாரிடமே செய்தியாளர்களும் கேட்டனர்.. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பாதியிலே திரும்பி விட்டாரே, பிரதமர், உள்துறை அமைச்சர் அவரை சந்திக்க மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே என்று கேட்கப்பட்டுள்ளது..

மறுப்பு விளக்கம்
அதற்கு ஜெயக்குமார், குடியரசு தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் தம்பிதுரை கலந்துகொண்டுள்ளார்... இருக்கின்ற சூழ்நிலையையும் பார்க்கவேண்டும்.. ஒரு பக்கம் குடியரசுத் தலைவருக்கான தேர்தல். இன்னொன்று, குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல்... அடுத்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்... இந்த மூன்றும் நடக்கும் சூழ்நிலையில் அவர்களுக்கு எவ்வளவோ வேலை இருக்கும்... வேறு ஒரு நாளில் இந்தச் சந்திப்பு இருக்கும்.. நாங்கள் சந்திக்கிறோம் என்று கேட்டு அவர்கள் வாய்ப்பு தரவில்லை என்று சொல்லவில்லையே என்றார்.

நெடிய விளக்கம்
குடியரசுத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல், பாதியிலேயே முடித்துகொண்டு எடப்பாடி பழனிசாமி சென்னை வந்ததையும், பிரதமரை சந்திக்காமல் எடப்பாடி ஊர் திரும்பியதற்கு ஜெயக்குமார் தந்த இந்த நீண்ட நெடிய விளக்கத்தையும் அனைத்து மீடியாக்களும் நேரடி செய்திகளாகவே வெளியிட்டன.. ஆனால், எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்து பேசியதாகவும், அதிலும் நீண்ட நேரம் பேசியதாகவும் எஸ்பி வேலுமணி, அனைத்து கட்சிகளை மட்டுமல்லாமல், அதிமுகவையும் சேர்த்த அதிர வைத்துள்ளார்.

வேலுமணி - கட்டுக்கதை
எஸ்பி வேலுமணி இது தொடர்பாக சொல்லும்போது, "எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் அதிகமாக பேசினார்.. டெல்லிக்கு எடப்பாடி போனாரு.. பிரதமரை பார்க்க முடியல.. ஹோம் மினிஸ்டரை பார்க்க முடியல.. இப்படியெல்லாம் சொல்றாங்களே... பாரதப் பிரதமரை அந்த நிகழ்ச்சியில் சந்தித்து, அதிக நேரம் பேசியதே எடப்பாடிதான்.. பிரதமர் பக்கத்திலேயேதான் எடப்பாடி நிக்கறாரே.. ஆனால் கட்டுக்கதையை சொல்றது இந்த திமுகதான்.. அதனால், போன வேலை என்னவோ அதை மட்டும் எடப்பாடி செஞ்சுட்டு வந்தார்.. கூடவே நான் தான் இருந்தேனே" என்றார்.

ரத்தத்தின் ரத்தங்கள்
எஸ்பி வேலுமணியின் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. அப்பாயிண்ட்மென்டே எடப்பாடிக்கு தரவில்லை என்று செய்திகள் கசிந்து வரும் நிலையில், எடப்பாடி ஆதரவாளர்களான ஜெயக்குமார் ஒன்று சொல்கிறார், வேலுமணி ஒன்று சொல்கிறார் என்பதால், உண்மையிலேயே டெல்லியில் என்ன நடந்தது என்று தெரியாமல் ரத்தத்தின் ரத்தங்கள் உச்சக்கட்ட குழப்பத்தில் உள்ளனராம்..!












Click it and Unblock the Notifications