"கவர்ச்சி" நடிகை சன்னி லியோன் டான்ஸ்ஸை பார்த்த "தலை"?.. ஜூனியர் எம்ஜிஆர் ஒரே போடு.. என்னாச்சு
சன்னிலியோன் ஆட்டத்தை ஜெயக்குமார் பார்த்ததாக ஜூனியர் எம்ஜிஆர் தெரிவித்துள்ளார்
சென்னை: மிக மிக முக்கியமான குற்றச்சாட்டு ஒன்று, மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மீது திணிக்கப்பட்டுள்ளது.. ஜூனியர் எம்ஜிஆர் இந்த பிரச்சனையை கிளப்பி உள்ளார்.
அதிமுக இளைஞரணி துணை செயலாளரும், எம்ஜிஆரின் பேரனுமாகியவர் ஜூனியர் எம்ஜிஆர்.. இவர்தான் ஜெயக்குமாரை, அளவுக்கு அதிகமாக சீண்டி ஒரு பேட்டி தந்துள்ளார்.
ஒற்றை தலைமை விவகாரம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இதுதொடர்பாக ஜூனியர் எம்ஜிஆர் ஒரு பேட்டி தந்திருந்தார்.
எடப்பாடியெல்லாம் எம்ஜிஆராக முடியாது! ஓபிஎஸ் தான் கட்சிக்கு தலைமை! ஜுனியர் எம்ஜிஆர் சொல்லிட்டாரே!
தோட்டம் ராமாபுரம்
அதில், "கடந்த காலங்களில் அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் வரும்போது கட்சி சட்ட விதிகளின்படி முடிவுகள் எடுக்கப்பட்டது.. ஆனால் இப்போது ஒற்றை தலைமை ஏற்படுவதற்கான அவசியம் ஏற்படவில்லை. தற்போதைய விவகாரத்தால் கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் மிகுந்த ஒரு குழப்பத்துடனும் கட்சியின் எதிர்காலம் குறித்து ஒரு பயத்துடனும் தொடர்ந்து தங்களுடன் பேசி வருகிறார். எம்ஜிஆரின் கட்சிக்கு சொந்தம் கொண்டாட விரும்பும் இபிஎஸ் இதுவரை ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கு வந்ததில்லை. வெறும் பேனர் மற்றும் போஸ்டர்களின் மட்டுமே எம்ஜிஆர்க்கு மரியாதை அளிக்கிறார்கள்" என்றார்.
கவர்ச்சி நடிகை
பிறகு ஜெயக்குமார் குறித்து கூறும்போது, "எம்ஜிஆர் பேரனான நான், எம்ஜிஆர் போட்டியிட்ட ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில் முன்னாள் அமைச்சர் வளர்மதி அதனை தடுத்து விட்டார்.. மாறாக கட்சி மேடைகளில் எம்ஜிஆர் பாடல்களை தவறாக பாடுகிறார்கள்.. ஜெயக்குமார் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்" என்று குற்றஞ்சாட்டி இருந்தார். இது மிகுந்த பரபரப்பை அதிமுகவுக்குள் ஏற்படுத்தி வருகிறது.
பச்சைக்கிளி
அதிமுகவின் சீனியர், மாஜி அமைச்சர் ஜெயக்குமாரை பொறுத்தவரை, எம்ஜிஆர் பிரியர்.. எந்த தேர்தல் என்றாலும், எம்ஜிஆர் பாட்டை பாடிதான் பிரச்சாரங்களை மேற்கொள்வார்.. ஒருமுறை இப்படித்தான், ''பச்சைக்கிளி முத்துச்சரம்'' என்ற பாட்டை பி.சுசிலாவுடன் சேர்ந்து பாடி, அவரது காலில் விழுந்து ஆசிபெற்றார் ஜெயக்குமார்.. அதுமட்டுமல்ல, தான் பாடிய இந்த பாடலுக்கு எம்ஜிஆர் ரசிகர் ஒருவர், 2000 ரூபாய் அன்பளிப்பாக தந்தார்.. அதை வாங்கி தன் பாக்கெட்டில் வைத்து கொண்டாராம்.. அதையும் அவரே அந்த மேடையில் பெருமிதமாக சொல்லி இருந்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து
ஒருமுறை, உய்யாலி குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் திட்டத்தின் பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.. இதில் கலந்து கொண்டு, வழக்கம்போல் எம்ஜிஆர் பாட்டு பாடினார் ஜெயக்குமார்.. எம்ஜிஆர் பாடலை சரியாகத்தான் பாடினார்.. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து பாட்டைதான் தப்பாக பாடிவிட்டாராம்.. தமிழ்த்தாய் வாழ்த்து தெரியாமல் ஜெயக்குமார் உளறினார் சினிமா பாட்டு பாடத் தெரிந்தவருக்கு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தெரியவில்லை என்றும் பொதுமக்களே கேலி செய்ததாக அப்போதைய பத்திரிகைகளில் செய்தியும் வந்தன.
சன்னி லியோன்
நேற்று முன்தினம்கூட, ஓபிஎஸ்ஸை விமர்சிக்கும்போது, "தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார். ஓபிஎஸ்.. "பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர்கள் சென்றதில்லை" என்று எம்ஜிஆர் பாட்டை பாடிதான் எச்சரிக்கை விடுத்தார்.. இப்படி எம்ஜிஆரை தன்னுடைய அரசியலில் நுழைத்துகொண்டே இருக்கும் ஜெயக்குமார் மீது, இப்படி ஒரு குற்றச்சாட்டா? என்ற அதிர்ச்சி கேள்விகள் எழுந்து கொண்டிருக்கிறது.. ஆனால், அந்த சன்னி லியோன் டான்ஸ் விஷயம்தான் என்னவென்று தெரியவில்லை..!