பரபர ஆக்ஷன்! மாற்றுத்திறனாளிகளுக்காக உதயநிதி ஸ்டாலின் செய்த மிகப்பெரிய உதவி.. நெகிழ்ந்த பேராசிரியர்
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாற்றுத் திறனாளிகளுக்கு 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்பியதோடு, அதுகுறித்து புகைப்படம் கூட வெளியிடவில்லை என நெகிழ்ந்து போய் கூறியுள்ளார் பேராசிரியர் தீபக் நாதன்.
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்கள் தத்தளித்தன. தமிழக அரசு, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது. மழை வெள்ளத்தால் மாற்றுத் திறனாளிகள் ஏராளமானோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில், ரூபாய் 25 லட்சம் மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவரும், மாற்றுத்திறனாளிகள் ஆர்வலருமான பேராசிரியர் தீபக் நாதன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திடீர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உங்களை அவசரமாக பார்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது. சென்றவுடன், எழுந்து வந்து வரவேற்றார். ஆச்சர்யமாக இருந்தது. மாற்றுத்திறனாளிகள் வெள்ளத்தால் பாதித்திருப்பார்களே, விவரம் உண்டா என்றார்.
ஆம், மளிகை சாமான்கள் உடனடியாக கிடைத்தால் உதவியாக இருக்கும் முயற்சித்து வருகிறேன் என்றேன். உடனே எண்ணிக்கை, விலாசம் கொடுங்கள் , மாலைக்குள் வரும் எனச் சொல்லி, அவரே கதவை திறந்து வழி அனுப்பினார். ஒன்றும் புரியவில்லை. எல்லாம் பட படவென நடந்து விட்டது. இன்று 25 லட்சம் மதிப்புள்ள பொருள், எங்கள் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களிடம் கொடுக்கப்பட்டது.
புதிய உபகரணங்கள் கேட்டிருந்தோம். அனைத்தும் வரும் என்றார். நான் அரசியல்வாதி தருகிறார் என்றால், எங்களோடு புகைப்படம் எடுப்பார், பேசியது வீடியோவாக வரும் என்று நினைத்தேன். இது எதையும் அவர் செய்யவில்லை. கொடுத்ததைக் கூட அவர் எங்கும் எழுதவில்லலை.

மாற்றுத்திறனாளிகளுடன் இந்நேரத்தில் நிற்கவேண்டும் என்று நினைத்து, அதை உடனே நிறைவேற்றிய அன்புக்கு நன்றி தோழர் 'உதயநிதி ஸ்டாலின்'. வேறு என்ன வடிவில் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. வலது கை கொடுத்தது, இடது கைக்கு தெரியாத முறை என்பார்கள் ! அப்படியே நிகழ்த்திவிட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் பேராசிரியர் தீபக் நாதன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "25 லட்ச ரூபாய் மதிப்பு பொருட்களை கேட்காமல் அனுப்பிய தோழர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 1000 மாற்றுத்திறனாளிகள் சார்பாக நன்றி." என தெரிவித்துள்ளார். தீபக் நாதனின் இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பலரும், உதயநிதி ஸ்டாலினை பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications