எடப்பாடியின் தகுதி நீக்க வியூகத்தை தவிடு பொடியாக்கும் தினகரன் அண்ட் கோ?
சென்னை: தங்களை தகுதி நீக்கம் ஏன் செய்யக் கூடாது என வரும் நோட்டீஸுக்கு 'ஜக்கையன்’ பாணி பதில் தந்து முதல்வர் எடப்பாடியின் வியூகத்தை தவிடுபொடியாக்க திட்டமிட்டுள்ளனராம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்.
கள்ளக்குறிச்சி பிரபு உள்ளிட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்த தகுதி நீக்க வியூகத்தை தவிடுபொடியாக்குவது என தினகரன் தரப்பு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை ஆளுநரிடம் மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் ஜக்கையனும் ஒருவர்.
திடீரென ஜக்கையன் சபாநாயகரை சந்தித்து, தம்மை தவறாக அழைத்துச் சென்றுவிட்டனர்; அரசுக்குத்தான் எப்போதும் ஆதரவு என ஒரு விளக்கம் கடிதம் கொடுத்தார். இதனால் ஜக்கையன் மீதான தகுதி நீக்க நடவடிக்கை கைவிடப்பட்டது.
இதேபாணியில்தான் தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேரும், நாங்கள் அதிமுகவின் எம்.எல்.ஏக்கள்தான். சட்டசபையில் பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பின் போது அதிமுக அரசைத்தான் ஆதரித்தோம்; நாளையும் ஆதரிப்போம் என்கிற அடிப்படையில் பதில் கடிதம் அனுப்ப இருக்கிறார்களாம்.
இப்படி ஒரு கடிதம் வந்தால் 3 எம்.எல்.ஏக்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போகும். இதனைத்தான் தினகரனும் எம்.எல்.ஏக்களுக்கு அட்வைஸ் செய்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications