குஜிலியம்பாறையே குலுங்கி போச்சுங்க... திண்டுக்கல்லார் செய்த வேலை இருக்கே.. அடடா அடடா!
திண்டுக்கல் சீனிவாசன் மறுபடியும் சர்ச்சையாக பேசி உள்ளார்
சென்னை: "கூரை ஏறி வைகுண்டத்துக்கு போனவன்" என்ற திண்டுக்கல் சீனிவாசன் சொன்னதுமே, அதிகாரிகள் அனைவரும் ஒருநிமிஷம் ஆடிப்போய்விட்டனர்.
திண்டுக்கல் சீனிவாசனை பொறுத்தவரை, சர்ச்சைகளின் டாப் லிஸ்ட் அமைச்சர்களில் ஒருவர்.. சில சமயம் இவரை செல்லூர் ராஜு ஓவர்டேக் செய்துவிடுவார். இப்படியே மாறி மாறி 2 பேரும் சர்ச்சைகளில் சிக்கினாலும், பொதுமக்கள் எல்லாவற்றையும் ஈஸியாக எடுத்து கொள்ள பழகிவிட்டனர் போலும். காரணம், 2 பேருமே வெள்ளந்திகள்.. மனசில் எதையும் வைக்காமல் பேசுபவர்கள் என்பதால்தான்.
ஊட்டியில் பழங்குடி சிறுவனை செருப்பை கழட்ட சொல்லிய விவகாரத்தில் சிக்கி கொண்டு, 3 நாள் படாதபாடு பட்டார் திண்டுக்கல்லார்.. அப்பாடா.. இந்த வருடம் முடிய போகிறது அவ்வளவுதான், இனி சர்ச்சைகளில் சிக்க மாட்டார் என்று நினைத்தார் சரியாக வருட கடைசியில் ஒரு பஞ்ச் பேசி நடுநடுங்க வைத்துவிட்டார்.
திமுகவை விமர்சித்து பேசி கொண்டிருந்தவர், திடீரென "திமுக ஆட்சியில், அவங்க அப்பா இதெல்லாம் செய்திருந்தால், புத்தர் வாரிசு, இயேசுநாதர் வாரிசு என்பார்கள். இதையே நாங்கள் செய்திருந்தால், இயேசுநாதரை சுட்ட கோட்சே வாரிசு மாதிரி... எது செஞ்சாலும் தப்புன்னு சொல்வாங்க" என்றார்.
இயேசுநாதரை சுட்ட கோட்சே வாரிசு என்றதுமே மேடையில் அமர்ந்திருந்த நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுகவினரும் அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். இந்த பேச்சு 2 நாளாக இணையத்தில் சுற்றி கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பே அடங்காத நிலையில், திடீரென ஒரு பழமொழியை திண்டுக்கல் சீனிவாசன் சொல்ல, கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லாம் வெலவெலத்து போய்விட்டனர்.
மீண்டும் உயிர்தெழுவார்.. இறந்த பெண் காவலரின் உடலுடன் 20 நாட்களாக பூட்டிய வீட்டில்.. திண்டுக்கல் ஷாக்
குஜிலியம்பாறை தாலுகா புளியம்பட்டியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும்போது, "கூரை ஏறி கோழி பிடிக்காதவன், கூரை ஏறி வைகுண்டத்திற்கு போன மாதிரி" என்றார்.. பிறகு மேடையில் இருந்த கட்சி நிர்வாகிகள், பழமொழியை திருத்தி அமைச்சருக்கு சொல்லி கொடுத்தனர். உடனே அமைச்சர், "கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வைகுண்டம் ஏறி" என்று மறுபடியும் குழப்பினார்.
ஆனாலும் கட்சியினர் விடவில்லையே.. மறுபடியும் பழமொழியை சரியாக திருத்தி சொல்லி தந்தனர்.. கடைசியாக, 3வது முறையாக "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போவானாம்" என்று தட்டுத்தடுமாறி சொல்லி முடிக்கவும், கைதட்டல் விண்ணையே பிளந்து கொண்டு போனது..!