நடிகர் விஜய்க்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள்.. அவருக்கு.. இயக்குனர் அமீர் அதிரடி பேட்டி
Recommended Video
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை தமிழனாக வரவேற்கிறேன் என இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.
பிகில் படம் ரூ.300 கோடி வசூலை எட்டியதாக தகவல் வெளியானது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள், பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனம், சினிமா பைனான்சியர் அன்புசெழியன், நடிகர் விஜய் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தினர்.
நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் விஜய்யை நேரில் சென்று அழைத்துச்சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், விஜய்யை அவரது பனையூரில் உள்ள வீட்டில் வைத்து விசாரித்தனர். விஜய் வீட்டில் பல மணி நேரம் சோதனை நடந்தது. இதற்கிடையே விஜய் படத்தின் படப்பிடிப்புக்கு என்எல்சி நிர்வாகம் அனுமதி தந்தது தவறு என மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் இடத்தில் பாஜகவினர் போராட்டங்கள் நடத்தினர்.
பாஜகவின் போராட்டத்தை கண்டித்த பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி, மாஸ்டர் படப்பிடிப்பு அரசு அனுமதியுடனே நடந்து வருகிறது. இதற்கு எதிராக போராட்டம் நடத்துவது நியாமில்லை என்றார்.
இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவதை தடுக்கவும், ரஜினிக்கு போட்டியாக விஜய் அரசியலுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவுமே வருமான வரித்துறை மூலம் மத்திய அரசு மிரட்டுகிறது என சீமான் குற்றம்சாட்டியிருந்தார். அதேநேரம் வருமான வரித்துறை சோதனை என்பது விஜய்யை குறிவைத்தே நடந்ததாக புகார்கள் எழுந்தது.
கையசைவில் மெசேஜ் அனுப்பிய விஜய்.. மறுநாளே வரித்துறை சம்மன்.. அரசியலுக்கு 'இழுக்கப்படும்' விஜய்!
சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற விருது விழாவில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமீர், "பாஜக தமிழகத்தில் காலூன்றுவதற்கு விஜய் எதிராக இருப்பார் என்று பாஜக நினைத்திருக்கலாம், அதனால் தான் இதுபோன்ற போராட்டங்கள் நடந்திருக்கலாம்.
நடிகர் விஜய்க்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள் அவரை வளர்ச்சி அடையவே வைக்கும். இந்த அழுத்தங்கள் அவருக்கு பின்னடைவை தராது. விஜய் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் போராட்டம் நடத்தியது கண்டனத்துக்கு உரியது. விஜய் அரசியலுக்கு வந்தால் தமிழனாக வரவேற்கிறேன்" என்றார்.