இயக்குநர் பாரதிராஜா ஐசியூவில் அனுமதி.. சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
சென்னை: பழம்பெரும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநராக வலம் வந்தவர் பாரதிராஜா. இவருக்கு வயது 84 வயது ஆகிறது.

'16 வயதினிலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்தார். கிராமத்து கதைகளை மையப்படுத்தி திரைப்படங்கள் எடுத்து பெரிய ஹிட் கொடுத்தார்.
அதன்பிறகு கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்தார். தற்போது வயது முதிர்வு காரணமாக அவர் ஓய்வில் உள்ளார். இதற்கிடையே தான் சமீபத்தில் அவரது மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. இதில் பாரதிராஜா உடைந்து போனார்.
கடந்த ஒரு சில மாதங்களாக பாரதிராஜா மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். அதன்பிறகு மீண்டும் சென்னை திரும்பினார். இந்நிலையில் தான் கடந்த மாத இறுதியில் உடல்நலக்குறைவால் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக பாரதிராஜா குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டனர். "இயக்குநர் இமயம் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமாக உள்ளார். அவரது உடல்நிலை குறித்து சரியான தகவல்கள் அவரது குடும்பத்தினரின் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும். எனவே, உடல்நிலை குறித்து வந்துகொண்டிருக்கும் தகவல்களையும் செய்திகளையும் நம்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தான் ஒரு வாரம் கடந்தும் பாரதிராஜா தொடர்ந்து மருத்துவ சிகிச்சையிலேயே உள்ளார். இந்நிலையில் தான் பாரதிராஜாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் இன்று ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐசியூவில் உள்ள பாரதிராஜாவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications