புத்திசாலின்னு நினைப்பு; ஏன் இப்படி பேசுறீங்க; நான் ஓடி ஒளியும் ஆளில்லை; மோகன் ஜி ருத்ரதாண்டவம்!
சென்னை: ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் இடம்பெறாத ஒரு காட்சியை இருப்பதாக அவதூறு பரப்பி வருபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எச்சரித்திருக்கிறார் அந்தப் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான மோகன் ஜி.
ஜெய்பீம் திரைப்பட பிரச்சனையை மடைமாற்றிவிடும் நோக்கோடு ருத்ரதாண்டவம் திரைப்படம் குறித்து சில அதிமேதாவிகள் பொய் பரப்புரை செய்து வருவதாக கொதித்திருக்கிறார்.
மேலும் திரெளபதி படம் வெளியாகிய போது தாம் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் நின்று பதில் சொன்னதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா
தமிழ் சினிமா உலகுக்கு இது போதாத காலம் போல், தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு திரைப்படமும் ஏதேனும் ஒரு ரூபத்தில் சர்ச்சையில் சிக்கி வருகிறது. நடிகர் சிலம்பரசன் படத்தை ஒரு சிலர் முடக்க நினைப்பதாக கூறி அவரது தாயும், தந்தையும் ஒரு பக்கம் கண்ணீரோடு பேட்டிகள் அளித்து வந்த சூழலில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்துக்கு வன்னியர் சமுதாய அமைப்புகள் மூலம் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

ருத்ரதாண்டவம் படம்
இதையடுத்து நடிகர் சிலம்பரசன் மீது பட்ட ஊடக வெளிச்சம் நடிகர் சூர்யா பக்கம் திரும்பியது. இப்போது என்னவென்றால் திரெளபதி படத்தின் இயக்குநரான மோகன் ஜி, அவரது அடுத்த படைப்பான ருத்ரதாண்டவத்தில் அம்பேத்கர் குறித்து இழிவுப்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இது தொடர்பாக அவரது சொந்த யூ டியூப் பக்கத்திலேயே விளக்கம் அளித்துள்ள மோகன் ஜி, அம்பேத்கர் ஐயா எல்லோருக்குமான தலைவர் என்றும் அவர் குறித்து தனது படத்தில் இழிவான காட்சியை வைக்கவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

சட்டரீதியாக
மேலும், சர்ச்சைக்குரியதாக கூறப்படும் அந்தக் காட்சிகளையும் ஓரிரு நிமிடங்கள் வெளியிட்டு விமர்சனங்களுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இல்லாத ஒரு காட்சியை பொல்லாத ஒரு எண்ணத்தோடு சில புத்திசாலிகள் பொய் பரப்பி வருவதாகவும், தாம் எதற்கும் ஓடி ஒளியக்கூடியவன் இல்லை எனவும் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார் இயக்குநர் மோகன் ஜி. இனியும் ருத்ரதாண்டவம் படம் குறித்து பொய்யான தகவலை பரப்புவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்திருக்கிறார்.

படம் பார்க்காமல்
ருத்ரதாண்டவம் திரைப்படத்தை பார்க்காமலேயே அது தொடர்பாக ஒரு சிலர் விமர்சிப்பது காமெடியாக இருப்பதாகவும் தனது படத்தை பார்த்துவிட்டு அதிலுள்ள குறைகளை கூறினால் தாம் ஏற்றுக்கொள்வேன் எனவும் இயக்குநர் மோகன் ஜி தெரிவித்திருக்கிறார். இதனிடையே திரெளபதி படம் வெளியான போது தாம் எங்கும் ஓடி ஒளியவில்லை என இவர் கூறியிருப்பது, சூசகமாக ஜெய்பீம் படத்தின் இயக்குநர் ஞனவேலை மனதில் வைத்து தான் இருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications