திருமாவளவனுக்கு விருது.. சாதிகள் உள்ளதடி பாப்பான்னு சொல்லுவாங்களா?.. இயக்குநர் மோகன் ஜி அட்டாக்
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்பி திருமாவளவனுக்கு தத்துவ பேரறிஞர் விருது வழங்கப்பட்டதை விமர்சித்து இயக்குநர் மோகன் ஜி ஒரு பதிவு போட்டுள்ளார்.
பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் மோகன் ஜி. இவர் இந்த படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு திரௌபதி எனும் படத்தை இயக்கினார்.

இந்த படம் பிற்போக்குத்தனமான கருத்துகளை பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அது போல் ருத்ரதாண்டவம் எனும் படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்த படமும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மோகன் ஜி செல்வராகவனை வைத்து பகாசூரன் எனும் படத்தை இயக்கியிருந்தார். இந்த படமும் சமூக அக்கறை கொண்ட படமாகும். பாலியல் தொழிலில் பெண்கள் எப்படி சிக்குகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை. ஆனால் இந்த படம் அவருக்கு எதிர்பார்க்க அளவுக்கு வெற்றியை தேடி தரவில்லை.
இவர் சமூகவலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகள் குறித்தும் அரசியல் குறித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். கூடவே சர்ச்சையிலும் சிக்குகிறார். தற்போது இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை விமர்சித்து ட்வீட் போட்டுள்ளார்.
அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழ்நாடு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி எஸ்சி, எஸ்டி ஆசிரியர் சங்கம் சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனுக்கு தத்துவ பேரறிஞர் விருது வழங்கப்பட்டது. இதைத்தான் இயக்குநர் மோகன் ஜி விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ட்வீட்டில் இந்த ஆசிரியர்கள் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லித் தருவாங்களா, இல்லை ஜாதிகள் உள்ளதடி பாப்பான்னு சொல்லித் தருவாங்களா என கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். அண்மையில் திருவொற்றியூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோகன் ஜி கூறியிருப்பதாவது: அண்மையில் காவாலா பாடல் வெளியானது. அதில் தமன்னா நடனமாடியிருந்தார்.
ஆனால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதில் சிம்ரன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடனமாடுவதை போல் வீடியோக்கள் வெளியாகியிருந்தன. இதை முதலில் பார்ப்பவர்கள் உண்மை என நினைப்பார்கள். வாட்ஸ் ஆப்பில் பெண்களாகிய நீங்கள் வைக்கும் போட்டோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதை தவறான வீடியோவில் பயன்படுத்தினால் என்ன செய்வீர்கள்,
எங்கு போய் புகார் அளிப்பீர்கள். எனவே குடும்பமாக இருக்கும் போட்டோக்களையும் பிக்ஸல் குறைவாக இருக்கும் போட்டோக்களையும் டிபியாக பயன்படுத்துங்கள். இவ்வாறு மோகன் ஜி பேசியிருந்தார். இவரது இந்த கருத்தும் பெரும் சர்ச்சைக்குள்ளானது. ஏன் பெண்களுக்கு மட்டும் அறிவுரை, ஏன் இப்படி பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது என ஆண்களுக்கு அறிவுறுத்தலாமே என சில அமைப்புகள் விமர்சித்திருந்தன.












Click it and Unblock the Notifications