ராமர் கோயிலை ஆதரித்து ரஜினி சொன்ன விசயம்.. இயக்குநர் பா.ரஞ்சித் ஏற்க மறுப்பு!
சென்னை: ராமர் கோயில் திறப்பு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தில் தனக்கு மாற்றுக் கருத்து உள்ளது என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்து இருக்கிறார்.
அசோக் செல்வன் - ஷாந்தனு இணைந்து நடிக்கும் ப்ளூ ஸ்டார் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் நீலம் புரொடெக்சன்ஸ் சார்பாக தயாரித்து இருக்கிறார். சென்னையில் நடைபெற்ற இந்த திரைப்பட நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இதன் பின்னால் நடக்கும் மதவாத அரசியலை நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. ராமர் கோயிலுக்கான ஆதரவு, எதிர்ப்பு என்பதை தாண்டி இது போன்ற விசயமே நடக்கக் கூடாது என நினைப்பதே பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஒரு சிக்கலான சூழல் நாட்டில் நிலவி வருகிறது. மதசார்பற்ற இந்தியா எதை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது என கேள்வியை கேட்க வேண்டி உள்ளது.

நம்முடைய பிரச்சனை கோயில் கூடாது என்பது இல்ல. பராசக்தி படத்திலேயே ஒரு வசனம் வரும். கோயில் கூடாது என்பதல்ல.. கொடியவர்களின் கூடாரமாக கோயில் ஆகிவிடக்கூடாது என்பதுதான் நம்முடைய கவலை. அதன் அடிப்படையில்தான் நான் பேசினேன். இந்தியாவில் ஒரு கோயில் திறப்பதை கடவுள் நம்பிக்கையோடு பார்க்கலாம். அதை ஏன் அரசியலாக நாம் பார்க்க வேண்டும்?" என்றார். அப்போது ஒரு செய்தியாளர் ராமர் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றது பற்றி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அவர், "நடிகர் ரஜினிகாந்த் அங்கு சென்றது அவரது விருப்பம். இதுபோன்ற விசயங்களில் அவருடைய கருத்தை ஏற்கனவே சொல்லிவிட்டார். 500 ஆண்டுகள் பிரச்சனை தீர்ந்துவிட்டது என சொல்கிறார். ஆனால், அந்த பிரச்சனையின் பின்னால் உள்ள அரசியலை நாம் கேட்க வேண்டி உள்ளது. தவறு சரி என்பதை மீறி அதில் விமர்சனம் எனக்கு இருக்கிறது." என்றார். முன்னதாக திரைப்பட விழாவில் பேசிய பா.ரஞ்சித், இன்று மிக முக்கியமான நாள். வீட்டில் கற்பூரம் ஏற்றவில்லை என்றால் நாம் எல்லாம் தீவிரவாதிகள். அந்த அளவுக்கு பயங்கரமாக போகிறது. இந்தியா மிகவும் தீவிரமான காலக்கட்டத்தை நோக்கி நகர்கிறது. அடுத்த 5 ஆண்டுகள், 10 ஆண்டுகளில் நாம் இந்தியாவில் எவ்வளவு மோசமாக இருக்கப்போகிறோம் என்ற பயம் உள்ளது." என்றார்.












Click it and Unblock the Notifications