கொளுத்தும் வெயில்.. தொழிலாளர்களை காக்க நடவடிக்கை! தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று தொழிலக பாதுகாப்பு இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தீவிரம் அதிகமாக இருந்து வருகிறது. ஏறத்தாழ அனைத்து மாவட்டங்களிலும் வெயில் 100 டிகிரியை கடந்தும் அதை ஒட்டியும் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் வெயில் பாதிப்பில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்க சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. தமிழக தொழிலக பாதுகாப்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

“காலையில் விரைவாக பணியை தொடங்கி மதிய வேளையில் தொழிலாளர்களுக்கு இடைவேளை அளிக்க வேண்டும்.
மாலையில் வெயில் குறைந்த பிறகு பணிகளை தொடங்க வேண்டும் என நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள், கட்டடப் பணி, கல் குவாரி, சாலை அமைத்தல் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்ய அறிவுறுத்தல்.
தொழிற்சாலைகளுக்கு உள்ளே பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும்.
வெப்பம் அதிகமாக உள்ள துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
தொழிற்சாலைகளில் கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அறிவுறுத்தல்கள் முறையாக அமல்படுத்தப்படுகின்றனவா? என்பதை துணை இயக்குநர்கள் கண்காணிக்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக வானிலை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் பொதுவாக இயல்பை விட 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகியிருக்கிறது. கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. 9 இடங்களில் வெயில் 104 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில், ஈரோட்டில் 42.2 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 41.8°, சேலத்தில் 41.7°, கரூர் பரமத்தியில் 41.5°, தர்மபுரியில் 40.7°, நாமக்கல்லில் 40.5°, திருச்சியில் 40.2°, திருத்தணி மற்றும் வேலூரில் 40.0° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களில் 38°-40° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோர பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34° - 38° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22° -30' செல்சியஸ் பதிவாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் 36.8° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.2° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அடுத்த ஏழு தினங்களை பொறுத்த அளவில், தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே இன்று முதல் ஏப்.29ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications