7 பேர் விடுதலை விவகாரம்... ஆளுக்கொரு கருத்து... திமுக -காங்கிரஸ் கூட்டணியில் வெடிக்கும் மோதல்..!
சென்னை: ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக -காங்கிரஸ் இடையே கருத்து மோதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
7 பேரை விடுவிக்குமாறு திமுக வலியுறுத்தி வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
மேலும், கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக பார்க்க வேண்டுமே தவிர தமிழர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது என கூறியுள்ளார். இதனிடையே இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கூட்டணி வேறு கொள்கை வேறு, கூட்டணிக் கட்சி என்பதால் காங்கிரஸ் கூறும் எல்லாவற்றையும் ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இது காங்கிரஸ் தரப்பை கொதிப்படைய வைத்துள்ள போதும், தேர்தல் முடியும் வரை யாரும் வாயை திறக்காதீர் என மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவால் அமைதி காக்கிறது கை தரப்பு. இதற்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, திமுக-காங்கிரஸ் கூட்டணி சுதந்திரக் கூட்டணி என்றும் அறிவுப்பூர்வமான கூட்டணி எனவும் புதிய விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ஏழு தமிழர் விடுதலை விவகாரம் காங்கிரஸ் சொல்வதை ஏற்க முடியாது - திமுகவின் ஆர்.எஸ் பாரதி
மேலும், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, மதிமுக, காங்கிரஸ், என ஒவ்வொரு கட்சிக்கு ஒவ்வொரு கொள்கை உண்டு என்றும் மதச்சார்பின்மை என்ற புள்ளியில் அனைவரும் இணைந்து செயலாற்றுவதாகவும் தெரிவித்தார். அதனடிப்படையில் கருத்துக்களை முன் வைப்பதாகவும் கூறினார்.
இப்படி 7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக-காங்கிரஸ் இடையே முரண்பட்ட கருத்து நிலவுவதை அதிமுக தரப்பு ரசிக்கிறதோ இல்லையோ பாஜக தரப்பு வெகுவாக ரசிக்கிறது.