வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்
சென்னை: சென்னை வேளச்சேரியில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை, போலீசாரின் பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
போலீஸ் உதவியுடன், ரயில்வே, வருவாய், சி.எம்.டி.ஏ, மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து, இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிலங்களுக்கு பட்டா பெற்று 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் தங்களுக்கு அரசு மாற்று இடம் வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
சென்னை வேளச்சேரி ரயில் நிலையம் அருகே 5 ஏக்கர் பரப்பளவில் ரயில்வேத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் சட்ட விரோதமாக 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கடைகள், அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வேளச்சேரியில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளை, காலி செய்யுமாறு ரயில்வே நிர்வாகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து, அப்பகுதி மக்கள் தொடர்ந்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை காலி செய்யக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில்,உச்சநீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது.
இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அளிக்கப்பட்ட அவகாசம் இன்றுடன் முடிவடைந்ததால், மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இதற்காக அடையாறு துணை ஆணையர் ஷேஷங் சாய் தலைமையில், சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு பணிகளை அகற்றும் பணி காலை 8 மணி முதல் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போலீசார் மற்றும் வருவாய்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே, ஒருவர் திடீரென அப்பகுதியில் இருந்த செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து வேளச்சேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற நபரை மீட்டு, அவருக்கு முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.