தீபாவளி பண்டிகை.. விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக இத்தனை பேர் கைதா? தமிழக காவல்துறை விளக்கம்
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 2095 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை 2.11. 2023 மற்றும் 13.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் பட்டாசு வெடிப்பது வழக்கமாக உள்ளது. பட்டாசு அளவுக்கு அதிகமாக வெடிப்பதனால் காற்றுமாசு ஏற்படுவதால், வயதானவர்கள் மற்றும் மூச்சு திணறல் பாதிப்பு உள்ளவர்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து வருகிறது தமிழக சுற்றுச்சூழல் துறை . தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
அதேபோல் நீதிமன்ற உத்தரவுபடி தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க அனுமதிக்கப்படுகிறது. தீபாவளியன்று காற்றின் தரத்தை மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாவட்டம் வாரியாக கண்காணிக்கப்படுவது வழக்கம் ஆகும். அனுமதி அளித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில்தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவின் பேரில் , தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட 12.11.2023 மற்றும் 13.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, பட்டாசு வெடிப்பதற்கு குறிப்பிடப்பட்ட நேரமான காலை 6:00 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்த காரணத்திற்காக மாநில முழுவதும் 2246 பேர் மீது 2206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் 2095 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 568 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 2095 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். " இவ்வாறு தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications