Diwali special trains: தென் மாவட்ட பயணிகளுக்கு தீபாவளி பரிசு! சென்னையில் இருந்து 2 சிறப்பு ரயில்கள்.. தெற்கு ரயில்வே
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் (Diwali special trains) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை வழியாக செங்கோட்டைக்கு ஒரு ரயிலும், மதுரை வரை ஒரு மெமு ரயிலும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இந்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி நாளை (அக் 17) சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வண்டி எண்: 06013/06014 தாம்பரம் - செங்கோட்டை வரை இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு கிளம்பும் இந்த ரயில், செங்கோட்டைக்கு மறுநாள் காலை 7.30 மணிக்கு சென்றடையும்.

சிறப்பு ரயில்கள்
அதேபோல, செங்கோட்டையில் இருந்து 20 ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் திங்கள் கிழமை காலை 9.45 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல் மருத்துவர், விழுப்புரம், விருதாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர்,சிவகாசி, ஸ்ரீவல்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியுள்ளது.
அதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு ஒன்வே மெமு ரயில் இயக்கப்படுகிறது. 06161- வண்டி எண்: சென்னை எழும்பூரில் இருந்து 17 ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் மறுநாள் காலை சனிக்கிழமை 10.15 மணிக்கு மதுரை சென்றடையும். முழுவதும் முன்பதிவு இல்லாமல் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ந் தேதி முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அன்று இரவு 7.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது.
மதுரைக்கு சிறப்பு மெமு ரயில்
அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு 18-ந் தேதி முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது. 18 ஆம் தேதி சனிக்கிழமை 11.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு மதுரையை வந்து சேரும்.
மதுரையில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு 21-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 4.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது. 21 ஆம் தேதி புறப்படும் மெமு ரயில், சோழவந்தான், கொடைக்கானல் ரோடு வழியாக திண்டுக்கல்லுக்கு இரவு 9.30 மணிக்கு வந்து சேரும்.
நின்று செல்லும் இடங்கள்
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்று செல்லும் இந்த ரயில் இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு மணப்பாறை வழியாக திருச்சிக்கு 10.45 மணிக்கு வந்து சேரும். திருச்சியில் ஐந்து நிமிடங்கள் நிற்கும் இந்த ரயில் 10.50 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், மேல் மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு வந்து சேரும். தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இந்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications