தென் மாவட்டங்களுக்கு தீபாவளி சிறப்பு ரயில்.. 20 நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்தது
சென்னை: தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த ரயிலின் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், வெறும் 20 நிமிடங்களில் டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்தது.
தீபாவளிக்கான முன்பதிவு என்பது கடந்த 2 மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்துவிட்டது. வழக்கமாக ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்னரே தொடங்கிவிடும். அந்த வகையில் அக்டோபர் மாதம் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்கான ரயில் முன்பதிவு கடந்த ஜூன் 30ம் தேதியிலிருந்து தொடங்கியது.

அக்.28 செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு கடந்த ஜூன் 30ம் தேதியும், அக்.29 செல்லும் ரயில்களுக்கு ஜூலை 1ம் தேதியும், அக்.30ம் தேதி செல்லும் ரயில்களுக்கு ஜூலை 2ம் தேதியும், அக்.31 செல்லும் ரயில்களுக்கு ஜூலை 3ம் தேதியும் முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன.
இந்நிலையில், தற்போது சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்.29, நவ.5 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06001) இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரலில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து அக்.30, நவ.6 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06002) இயக்கப்படும். இந்த ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக இயக்கப்படும்.
அதேபோல சென்னை சென்ட்ரலில் இருந்து செங்கோட்டைக்கு அக்.30, நவ.6 ஆகிய தேதிகளில் முழுவதும் ஏசி பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் (எண்: 06005) இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 9.20 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து அக்.31, நவ.7 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06006) இயக்கப்படும்.
இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக இயக்கப்படும். தாம்பரம் - கன்னியாகுமரி: தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்.28, நவ.4, 11 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06049) இயக்கப்படும். தாம்பரத்தில் நள்ளிரவு 12.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் பகல் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து அக்.29, நவ.5, 12 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.35 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06050) இயக்கப்படும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக இயக்கப்படும்.
வெளி மாநிலங்களை பொறுத்த அளவில், சென்னை சென்ட்ரலில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூருக்கு நவ.2-ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06037) இயக்கப்படும். மறுமார்க்கமாக மங்களூரில் இருந்து சென்னைக்கு நவ.3-ஆம் தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06038) இயக்கப்படும். இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஷோரனூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு வழியாக இயக்கப்படும்.
கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு நவ.4-ஆம் தேதி மாலை 6.05 மணிக்கு முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் (எண்: 06039) இயக்கப்படும். மறுமார்க்கமாக பெங்களூரில் இருந்து நவ.5-ஆம் தேதி பகல் 12.45 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06040) இயக்கப்படும். இந்த ரயில் கொல்லம், காயன்குளம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் டிக்கெட் விற்பனை 20 நிமிடங்களில் முடிந்தது. குறுகிய நேரத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்து தற்போது வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கின்றன.












Click it and Unblock the Notifications