சென்னை ஐ.ஐ.டி.யில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் புறக்கணிப்பு- கி.வீரமணி கடும் கண்டனம்
சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை அய்.அய்.டி. கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.டி) நேற்று (20.11.2021) நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் திட்டமிட்டே தமிழ்த்தாய் வாழ்த்து - ''நீராரும் கடலுடுத்த'' என்ற மொழி வாழ்த்துப் பாடாமல் புறக்கணித்துள்ளனர். வேறு ஏதோ ஒன்று நுழைக்கப்பட்டுள்ளது.

அலட்சியம் செய்வதா?
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவன நிகழ்ச்சிகளிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் மொழி வாழ்த்துப் பாடப் பட வேண்டும் (அதற்கு அவையினர் எழுந்து நிற்க வேண்டும் என்பதும் மரபு). ஆனால் இந்த தமிழ்நாடு அரசு ஆணையை சென்னை ஐ.ஐ.டி. அலட்சியப்படுத்தியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

தேவை நடவடிக்கை
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியமாகும்! முதல் தடவையல்ல இப்படி தமிழ் வாழ்த்தைப் புறக்கணிப்பது; (சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது) முன்பும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் அங்கே நடந்தேறியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் ஆணையைப் பின்பற்றவோ- மதிக்கவோ அய்.அய்.டி. என்ற ஆதிக்க வல்லாண்மை தயாராக இல்லை என்பது ஏற்கத்தக்கதுதானா? தமிழ்நாடு அரசும், கல்வியாளர்களும் உரிய கண்டனத்தைப் பதிவு செய்வது முக்கியமாகும். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.

ஐஐடிக்கு அட்வைஸ்
இதேபோல் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2018-ஆம் ஆண்டு ஐ.ஐ.டி.,யில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது. அப்போதும் அதை கடுமையாக கண்டித்தேன். அதைத் தொடர்ந்து ஐ.ஐ.டி நிர்வாகம் வருத்தம் தெரிவித்தது! 2019-ஆம் ஆண்டு ஐஐடி வைரவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து வைரவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அந்த வழக்கத்தை ஐ.ஐ.டி மாற்றக்கூடாது! தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கண்டிப்பாக பாடப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அரசு வேடிக்கை பார்ப்பதா?
மேலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சென்னை ஐ.ஐ.டியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணிக்கப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது. ஐ.ஐ.டியில் அவ்வப்போது இத்தகைய புறக்கணிப்பு நிகழ்வது ஏற்கத்தக்கதல்ல. இதனை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் சரியானதல்ல என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications