வேலைக்காக இளைஞர்கள் காத்திருக்கும் சூழலில்... அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 58-ஆக குறைத்திடுக -கி.வீரமணி
சென்னை: படித்துவிட்டு வேலைக்கிடைக்காமல் லட்சகணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் சூழலில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60-லிருந்து 58-ஆக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி தந்திட வேண்டும் என தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

வேலைவாய்ப்பு
''தமிழகத்தில் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள், நடுத்தர வயதினர்களின் எண்ணிக்கை 67 லட்சத்து 76 ஆயிரமாக உள்ளது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதில் பட்டதாரி மற்றும் வயது குறைந்த இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 12 லட்சம். சுமார் ஒன்றரை லட்சம் மாற்றுத் திறனாளிகள் வேலைக்குவிண்ணப்பித்துக் காத்திருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் முந்தைய அதிமுக அரசு தான்.''

விசித்திரம்
''மாநில அரசுக்கு சுமார் 5 லட்சம் கோடி கடன். அதில் பெரும் பகுதி பழைய கடனுக்கு கட்ட வேண்டிய வட்டித் தொகைக்காகவே புதிய கடன் என்ற விசித்திரமான 'நிதிமேலாண்மை' நிர்வாகம். இந்நிலையில், ஓய்வு பெற்று செல்லும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத் தொகை, பென்ஷன் உடனடியாக வழங்க இயலாததால், அவர்களை பதவியில் நீடிக்கச் செய்யும் 'உத்தி'யாகத்தான் 58 என்ற ஓய்வு வயதை 60 ஆக ஆக்கினார்கள்.''

இளைஞர்கள் துயர்
''கடினமான நிதி நெருக்கடியிலும் தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். இதில் தெளிவான கொள்கை முடிவாக,ஓய்வு வயது 60 ஆக உயர்த்தியதை,மீண்டும் 58 ஆக குறைக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பலருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்க குறுகிய காலத்தில் 29 ஆயிரம் கோடி முதலீடுகளை சிறப்பாக தொழில் துறையில் ஈர்த்துள்ளதை தொடர வேண்டும். வேலைவாய்ப்புகள் பெருகி, இளைஞர்கள் துயர் நீங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.''

பரிசீலனை
இதனிடையே இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே பரிசீலனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications