மோடி சொல்லியும் ஒன்னும் நடக்கல.. 96.90 வீழ்ந்த ரூபாய் மதிப்பு.. புதிய வரலாற்று சரிவு!
சென்னை: அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் இக்கட்டான நிலையில் சிக்கிக்கொண்டு இருக்கும் வேளையில், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்து 105 டாலருக்கு மேல் நிலைபெற்றுள்ளது. இந்த விலை உயர்வு கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியிருக்கும் உலக நாடுகளுக்கு பெரும் பாதிப்பை முதலீட்டு சந்தையிலும், பொருளாதாரத்திலும், நாணய மதிப்பிலும் ஏற்படுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 2 மாதமாக தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் இன்று புதிய வரலாற்று சரிவை பதிவு செய்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மோடி தங்கம் வாங்க வேண்டாம் என கூறிய பின்பும், டெல்லி அரசும், மத்திய நிதியமைச்சகமும் வொர்க் ப்ரம் ஹோம், எரிபொருள் சிக்கன நடவடிக்கை அறிவித்த பின்பும் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து ரூபாய் மதிப்பு தரையை தட்டியுள்ளது.

புதன்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 96.90 ஆக வீழ்ச்சியடைந்தது, இது வரலாறு காணாத புதிய சரிவாகும். 2 நாட்களுக்கு முன்பு பதிவான வரலாற்று சரிவான 96.6150 ரூபாய் அளவீட்டை கடந்து புது சரிவை பதிவு செய்துள்ளது. ஈரான் போர் தொடங்கிய பிப்ரவரி இறுதியில் இருந்து இப்போது வரை ரூபாய் மதிப்பு சுமார் 6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
எண்ணெய் விலை உயர்வு உலகம் முழுவதும் பணவீக்க அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல நாடுகளில் பத்திர வட்டி விகிதங்கள் பல ஆண்டுகளில் இல்லாத உயரத்தை எட்டியுள்ளன. இதனால் வெளிநாடுகளில் இருக்கும் முதலீடுகள் திரும்ப பெறப்பட்டு பத்திர முதலீட்டில் செய்யப்பட்டது.
இது இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. ஒருப்பக்கம் அதிகப்படியான எரிசக்தி விலை, மறுப்புறம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு வெளியேற்றம் ஆகியவை இந்தியாவின் பொருளாதார சமநிலையை தாக்கி நாணய இருப்பில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்கு சந்தை மற்றும் பத்திரச் சந்தையில் இருந்து சுமார் 22 பில்லியன் டாலர் அளவுக்கு பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.
வெளிநாட்டு கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகம் நம்பியுள்ள இந்தியா இந்த விலை உயர்வால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. மத்திய அரசு ஏற்கனவே லிட்டருக்கு பெட்ரோல், டீசல் விலையை 4 ரூபாய் வரையில் உயர்த்தியுள்ளது.
எரிபொருள் விலை காரணமாக உணவு பொருட்கள் முதல் தொழிற்சாலை உற்பத்தி பொருட்கள் வரை அனைத்து பொருட்களும் விலை உயர்வை சந்தித்து வருகிறது. இது நாட்டில் பணவீக்கத்தை அதிகரித்து பெரும் பாதிப்பை உருவாக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளையில் ரூபாய் மதிப்பு 97.50 ரூபாய் அளவுக்கு குறைந்தால் தற்போது பெட்ரோல், டீசல் விலையில் கொண்டுவரப்பட்ட 4 ரூபாய் விலை உயர்வு மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பீடு நன்மை முழுமையாக குறைந்துவிடும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
தற்போது ஈரான் - அமெரிக்கா இடையேயான அமைதிப் பேச்சுகள் மீண்டும் தொடங்கினால் மட்டுமே எண்ணெய் விலை குறைய வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது. ஆனால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த அமெரிக்காவும் - இஸ்ரோலும் வாஷிங்டனில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் செலவுகளை கவனமாகத் திட்டமிட வேண்டிய காலம் இது என பொருளாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.














Click it and Unblock the Notifications