ரூ.57 கோடி பரிசு.. லாட்டரி வாங்கி மறந்த நபருக்கு அடித்த ‘லக்'.. பழைய பேண்ட்டால் இப்போ கோடீஸ்வரர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் லாட்டரி வாங்கிய ஒருவர் அதனை மறந்து சுற்றி வந்தார். அவரது லாட்டரிக்கு ரூ.57 கோடி பரிசுத்தொகை விழுந்தது. ஆனால் லாட்டரி சீட் வைத்த இடம் தெரியாமல் தவித்த அவருக்கு பழைய பேண்ட் கைக்கொடுத்து ஒரே நாளில் கோடீஸ்வரராக்கி உள்ளது. என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்த ஒருவர் கடந்த 2025 ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி 'பிக்-6' எனும் லாட்டரியை வாங்கினார். கேஸ் விற்பனை செய்யும் நிலையத்தில் இருந்து அந்த லாட்டரியை வாங்கினார். லாட்டரியை வீட்டுக்கு எடுத்து சென்றவர் அதன்பிறகு மறந்துபோனார்.

லாட்டரி சீட் வாங்கியதை மறந்து அவர் வாழ்ந்தார். இந்நிலையில் தான் அவரது லாட்டரிக்கு 5.9 மில்லியன் டாலர் பரிசுத்தொகை விழுந்தது. இதன் இந்திய மதிப்பு ரூ.57 கோடியாகும். ஆனால் அந்த நபர் லாட்டரி சீட்டு வாங்கியதை மறந்ததால் பரிசுத்தொகை விழுந்தது பற்றி கண்டுகொள்ளவில்லை.
இதனால் பரிசுத்தொகையை யாருக்கும் வழங்காமல் அப்படியே வைக்கப்பட்டு இருந்தது. அமெரிக்காவை பொறுத்தவரை ஒருவர் லாட்டரியில் விழுந்த பரிசுத்தொகையை ஓராண்டுக்குள் பெற வேண்டும். அதன்பிறகு கிடைக்காது. அதுமட்டுமின்றி பரிசுத்தொகை விழுந்தும் அதனை உரியவர் பெறாவிட்டால் காலஅவகாசம் முடிவதற்கு முன்பு அதுபற்றி பொது அறிவிப்பு வெளியிடப்படும். வாங்கிய வாடிக்கையாளரை உஷார்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு செய்யப்படும்.அப்படித்தான் இந்த நபரின் பரிசுத்தொகை தொடர்பான செய்தி வெளியானது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து தான் நியூஜெர்சியை சேர்ந்த நபர் தான் வாங்கிய லாட்டரிக்கு ரூ.57 கோடி பரிசு விழுந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியில் திளைத்தார். ஆனால் அவர் கையில் லாட்டரி சீட்டு இல்லை. மேலும் இன்னும் 8 நாட்களில் லாட்டரி சீட்டை காண்பித்தால் தான் பரிசு கிடைக்கும். இல்லாவிட்டால் பரிசுத்தொகை கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டதால் அவர் பதற்றம் அடைந்தார். எப்படியாவது லாட்டரியை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று முயன்றார். லாட்டரி வாங்கிய கேஸ் ஏஜென்சியிடம் உதவி கோரினார். அவர்கள் வீட்டில் நன்றாக தேடும்படி கூறினர்.
இதையடுத்து அந்த நபர் வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடினார். வீட்டில் உள்ள அலமாரிகள், சமையலறை உள்பட அனைத்து இடங்களிலும் தேடினார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர் முயற்சியை கைவிடவில்லை. எப்படியாவது லாட்டரியை தேடி கண்டுபிடித்து விட வேண்டும் என்று துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து தேடிப்பார்த்தார். அப்போது ஒரு பேண்ட் பாக்கெட்டில் சுருண்ட நிலையில் அதிர்ஷ்ட லாட்டரி கிடைத்தது.
லாட்டரியில் எண்ணை சரிபார்த்தார். அப்போது பரிசு விழுந்ததாக கூறப்பட்ட எண்ணும், அவரது லாட்டரி எண்ணும் சரியாக இருந்தது. இதில் உற்சாகத்தில் கத்தி மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அந்த நபர் லாட்டரியை கொடுத்து ரூ.57 கோடி பரிசை பெற்றார்.












Click it and Unblock the Notifications