அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி? எடப்பாடி பழனிசாமி வைத்த ட்விஸ்ட்! இனிமேல் தான் அரசியல் கச்சேரி!
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுகிறதா என்ற கேள்விக்கு ஆம் என்றும் சொல்லாமல், இல்லை என்றும் சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
மேலும், இப்போது பேசுகிற பேச்சா இது என்றும் நேரம் வரட்டுமே எனக் கூறி கூட்டணி குறித்த கேள்வியிலிருந்து நழுவியுள்ளார். இன்னும் தேர்தலே அறிவிக்கவில்லை என்றும் இப்போது தான் விஜயகாந்த் மறைந்திருக்கிறார் இந்த நேரத்தில் கூட்டணி பற்றி பேசுவது சரியாக இருக்காது எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்தை இழந்த வேதனையில் அவரது குடும்பத்தினர் இருந்து வருகிறார்கள், இப்போது பேசுவது சரியாக இருக்காது எனத் தெரிவித்துவிட்டார்.

தேர்தல் நெருங்கும் போது எந்தெந்த கட்சி யாருடன் கூட்டணி என்பதை தெளிவுப்படுத்துவார்கள் என்றும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தமிழ்நாட்டில் வலிமையாக கூட்டணி அமையும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தான் வெற்றிபெறும் என மிகவும் நம்பிக்கை பொங்க கூறிய எடப்பாடி பழனிசாமி, மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முறையாக முன்னெடுத்திருந்தால் மக்கள் இந்தளவு பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் எனக் கூறினார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தென் மாவட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தேமுதிகவை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணியா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமியும் சஸ்பென்ஸான பதிலையே கூறியிருக்கிறார்.
இதன் மூலம் தேமுதிகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் பிரேமலதா எடுக்கப் போகும் முடிவுகள் எந்த திசையை நோக்கி இருக்கும் என்பதை அறியவும் அரசியல் களத்தில் எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன.












Click it and Unblock the Notifications