சிரித்த முகத்தோடு மின்னும் விஜயகாந்த்.. தேமுதிக அலுவலகத்தில் சிலையை திறந்து வைத்தார் பிரேமலதா!
சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் சிலை திறக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த்தின் 72வது பிறந்தநாளான இன்று அவரது சிலையை திறந்து வைத்தார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
1970களில் மதுரையில் இருந்து சினிமா ஆசையோடு சென்னைக்கு வந்து சினிமா துறையில் அடிமட்டத்தில் இருந்து போராடி வாய்ப்புகளைப் பெற்று, பின் படிப்படியாக உச்ச நடிகராக ஆனவர் விஜயகாந்த். ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களில் நடித்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர்.

150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், இரண்டு முறை ஃபிலிம்பேர் விருதையும், மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் வென்றவர். நடிகர் சங்கத் தலைவராக திறம்படச் செயல்பட்டு, நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டு வளர்ச்சிப் பாதைக்கு திருப்பியவர் விஜயகாந்த்.
கேப்டன் என தமிழ் சினிமா கலைஞர்களாலும், ரசிகர்களாலும், பொதுமக்களாலும் அன்போடு அழைக்கப்படுபவர் விஜயகாந்த். விஜயகாந்த்தின் அலுவலகத்துக்குச் சென்றால், யார் வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் நிலையை உருவாக்கி வைத்தவர் விஜயகாந்த்,
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கி அரசியலிலும் தனது வலிமையான முத்திரையைப் பதித்த விஜயகாந்த், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார். கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி 71 வயதில் விஜயகாந்த் மறைந்தார்.
விஜயகாந்த்தின் மறைவின் போது கலங்கிய கண்ணீர் ஒரு பேராறு. தனது கொடைத் தன்மையால் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த விஜயகாந்த்தின் 72வது பிறந்தநாள் இன்று. விஜயகாந்த் பிறந்த இன்றைய நாள் தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து,தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் சிலையை திறந்து வைத்தார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். விஜயகாந்த் சிலை திறப்பு விழாவில் விஜயகாந்தின் மகன்கள், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விஜயகாந்த்தின் சிலை, சிரித்த முகத்தோடு, கையை மடக்கி வெற்றிக் குறி காட்டிய காட்டிய நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. சிலையை திறந்து வைத்த பிரேமலதா, கண் கலங்கினார். அனைவரும் சிலையில் இருக்கும் விஜயகாந்த் போலவே “தம்ஸ் அப்” காட்டி விஜயகாந்த்தின் கனவுகளை நிறைவேற்றுவோம் என உறுதியேற்றனர்.












Click it and Unblock the Notifications