டெல்லிக்கு பறக்கும் விஜயகாந்த் மச்சான்.. ஒரே கையெழுத்தில் மாறிய தலையெழுத்து! காங்கிரஸுக்கு கல்தா!
சென்னை: 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தாகியுள்ளது.
முதலமைச்சரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொருளாளர் எல்கே சுதீஷ் முன்னிலையில் இந்த உடன்படிக்கை உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் 2005 ஆம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்ட பிறகு, முதல்முறையாக தேமுதிக மாநிலங்களவைக்கு செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
தேமுதிக கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தது. இந்த முறை அதிமுக மற்றும் பாஜக தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் மாநிலங்களவை இடம் வழங்குவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த பேச்சுவார்த்தை அடுத்தகட்டத்துக்கு செல்லவில்லை.

தேமுதிக திமுக கூட்டணி
இதனையடுத்து திமுகவுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முக ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். தொண்டர்களின் விருப்பத்தையும், மறைந்த தலைவர் விஜயகாந்த்-ன் எண்ணத்தையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். கூட்டணியில் இணையும் முன், தேமுதிக தரப்பில் ஒரு மாநிலங்களவை இடத்துடன் இரட்டை இலக்க எண்ணிக்கையிலான சட்டமன்றத் தொகுதிகளும் கோரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
மாநிலங்களவை எம்பி
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மாநிலங்களவை ஒரு இடம் வழங்குவது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்பட்டது. சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் யார் போட்டியிடுவார் என்பது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவிப்பார் என எல்கே சுதீஷ் தெரிவித்துள்ளார். இந்த முடிவு மூலம் திமுக கூட்டணியில் தேமுதிகவின் இடம் உறுதியானதாக பார்க்கப்படுகிறது.
எல்கே சுதீஷ்
இந்நிலையில், மாநிலங்களவை எம்பி தேர்தலுக்கு எல்கே சுதீஷ் தான் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேமுதிக, பல்வேறு தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டதுடன், சில தேர்தல்களில் கூட்டணியிலும் இருந்துள்ளது. ஆனால் திமுகவுடன் இணைவது இது முதல்முறை. இந்த மாற்றம் 2026 தேர்தல் கணக்கில் முக்கியமானதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த ஒப்பந்த கையெழுத்து நிகழ்வு மூலம், திமுக கூட்டணி மேலும் உறுதியாகியுள்ளது.
காங்கிரஸ் அதிருப்தி
மாநிலங்களவை இடம் வழங்கப்பட்டுள்ளதால், தேமுதிகவின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தொகுதிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தால் காங்கிரஸ் தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக டெல்லி தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல்
2026 சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பல ஆண்டுகள் கூட்டணியில் இருக்கும் காங்கிரசை ஓரம் கட்டி விட்டு சில நாட்களுக்கு முன்பு கூட்டணிக்கு வந்த தேமுதிகவுக்கு முதன் முதலாக மாநிலங்களவை எம்பி சீட்டை வழங்கும் ஒப்பந்தத்தில் ஸ்டாலின் கையெழுத்திட்டு இருப்பது கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications