கட்சி பாகுபாடின்றி நேசிக்கப்பட்ட விஜயகாந்த்.. சாதனைகளும்! சறுக்கலை ஏற்படுத்திய விமர்சனங்களும்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவால் அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் கண்ணீரில் மிதக்கின்றனர். விஜயகாந்த் திரைத்துறையிலும் அரசியலிலும் நிகழ்த்திய சாதனைகள் பற்றியும், சறுக்கலை ஏற்படுத்திய விமர்சனங்கள் குறித்தும் இங்கு பார்ப்போம்.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை காலமானார். விஜயகாந்த் மறைவு செய்தியை கேட்டு தொண்டர்களும், ரசிகர்களும் கதறி அழுதனர். விஜயகாந்த் மறைவையடுத்து அவரது கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரைத்துறை மற்றும் அரசியல் பிரமுகர்களும் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அரசியலிலும் சினிமா துறையிலும் தனி முத்திரை பதித்து தனக்கென ஒரு அசைக்க முடியாத இடத்தை பிடித்து இருந்த கேப்டன் விஜயகாந்த், யாராலும் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டு சென்றுள்ளார். விஜயகாந்தின் சாதனைகளை சற்று திரும்பி பார்க்கலாம்..
எம்ஜிஆர் ரசிகர்: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு அழகர் சாமி - ஆண்டாள் தம்பதியருக்கு மகனாக விஜயகாந்த் பிறந்தார். சிறுவயது முதலே சினிமாவில் ஆர்வம் அதிகம். எம்.ஜி.ஆரின் அதி தீவிர ரசிகர். எம்.ஜி. ஆரின் படங்களை ஒவ்வொரு காட்சிகளாக திரும்ப திரும்ப போட்டு பார்த்து ரசிக்கும் பழக்கம் கொண்டவர். பள்ளி படிப்பை முடித்த பிறகு தனது தந்தையின் அரிசி ஆலைக்கு சென்ற விஜயகாந்த், நண்பர்களின் உந்துதலினாலும் தனக்கிருந்த சினிமா ஆர்வத்தினாலும் படங்களில் நடிக்க சென்னைக்கு வந்தார்.
1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான இனிக்கும் இளமை' படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார். விஜயராஜ் என்ற தன் பெயரை விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார். சட்டம் ஒரு இருட்டறை', தூரத்து இடிமுழக்கம்', அம்மன்கோவில் கிழக்காலே', கேப்டன் பிரபாரகன், ரமணன் என அவரது வெற்றி படங்களின் பட்டியல் மிக நீளம். கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அரசியலில் செய்த சாதனை: தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக எண்ணற்ற உதவிகளை செய்து வந்த விஜயகாந்த், 2000 ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்துக்கு என தனி கொடியை அறிமுகப்படுத்தினார். 2005 ஆம் ஆண்டு விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சி ஆரம்பித்த மறு ஆண்டே அதாவது 2006 ஆம் ஆண்டு தனித்து போட்டியிடுவதாக அறிவித்து 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்.
பாமகவின் கோட்டையாக கருதப்பட்ட விருதாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் அமோக வெற்றி பெற்றார். தேமுதிக வேட்பாளர்கள் வேறு எங்கும் வெற்றி பெறாவிட்டாலும் கணிசமான வாக்குகளை பெற்று தமிழக அரசியலை திரும்பி பார்க்க வைத்தார். அதன்பிறகு 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர்: இந்த தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி மிகப்பெரும் வெற்றி பெற்றது. 41 இடங்களில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு 29 இடங்கள் கிடைத்தது. விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்த்திற்கு நேருக்கு நேர் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அதிமுக - தேமுதிக கூட்டணி முறிந்தது. 2016 ஆம் ஆண்டு விஜயகாந்த் தலைமையில் மக்கள் நல கூட்டணி அமைக்கப்பட்டது. மதிமுக, விசிக, தாமாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி அமைத்தன. எனினும், இந்த தேர்தலில் அக்கூட்டணி படு தோல்வி அடைந்தது. உளுந்தூர் பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் தோல்வி அடைந்தார்.
வேட்பாளர்களை அடித்ததாக சர்ச்சை: பின்னர் தொடர்ச்சியாக விஜயகாந்தின் தேமுதிகவுக்கு பின்னடைவே ஏற்பட்டது. அக்கட்சி அடுத்தடுத்த தேர்தலில் தோல்வி அடைந்ததோடு கட்சியின் வாக்கு சதவிகிதமும் சரியத் தொடங்கியது. அதன்பிறகு விஜயகாந்தின் உடல்நலமும் பாதிக்கப்பட்டார். தொண்டர்களை நேரடியாக சந்திப்பதையும் குறைக்க தொடங்கினார்.
விஜயகாந்த் சட்டமன்றத்தில் நடந்து கொண்ட விதம், தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர்களை அடித்ததாக எழுந்த சர்ச்சை, கட்சிக்குள் குடும்பத்தினர் ஆதிக்கம் என அவர் மீது சில விமர்சனங்களும் எழுந்தன. ஆனாலும் இதையெல்லாம் தாண்டி கட்சி பாகுபடின்றி அனைவராலும் நேசிக்கக் கூடிய தலைவராக விஜயகாந்த் மறையும் வரை இருந்தார்.












Click it and Unblock the Notifications