போச்சு.. "கைவிட்ட" பாஜக.. கருணை காட்டாத அதிமுக.. வெறுத்து போன விஜயகாந்த்.. வெளியேறிய தேமுதிக!
தேமுதிக தனித்து போட்டி என முடிவு செய்துள்ளது
சென்னை: நீண்ட இழுபறிக்கு பிறகு, பலத்த ஆலோசனைகளுக்கு பிறகு, நிறைய யோசனைகளுக்கு பிறகு தேமுதிக ஒரு முடிவுக்கு வந்துள்ளது.. அது தனித்து களம் காணுவது என்பதுதான்..!
Recommended Video
எல்லாவற்றிற்கும் பாமகவுடன் போட்டி கொண்டிருக்கும் தேமுதிக, இந்த முறையும் சீட் விஷயத்தில் போட்டி போட்டது.. பாமக கேட்ட 23 தொகுதிகளில், தேமுதிக செல்வாக்கு பெற்ற, 12 தொகுதிகள் இருக்கவும் அது தேமுதிகவுக்கு மேலும் டென்ஷனை தந்துவிட்டது.
அதேசமயம், தேமுதிகவுக்கு 10 முதல் 15 சீட்வரைதான் தர முடியும் என்பதிலும் அதிமுக கறாராக இருந்தது.. அப்போதுகூட அமைச்சர்கள் 2 பேர் கூட்டணியை உறுதி செய்ய முயற்சித்தனர்.. ஆனால், 24 சீட் என்று ஒத்த கண்டிஷனை தேமுதிக விதிக்கவும், அதோடு அதிமுக பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளியை வைத்துவிட்டது.
சுயமரியாதை
இறுதியில் கெடு விதித்தும் தேமுதிக பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.. இன்னொரு பக்கம் திமுக கூட்டணி மீதும் கவனம் தாவியது.. இறுதியில் தனித்து போட்டி என்ற முடிவுக்கு வந்துள்ளது. கடந்த முறை எம்பி தேர்தலின்போது, தேமுதிக ஆபீசில் விஜயகாந்த்திடம் நிர்வாகிகள் இதே கருத்தைதான் வலியுறுத்தினார்கள்.. "வேணாம் கேப்டன்.. வெற்றியோ, தோல்வியோ, நாம தனியாகவே நிற்கலாம்.. நம் சுயமரியாதையை விட்டுவிட வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டனர்.. ஆனாலும் கூட்டணி வைக்கவும், ஒருசில முக்கிய நிர்வாகிகள் விஜயகாந்த்துக்கு லட்டர் எழுதிஅனுப்பிவிட்டு கட்சியில் இருந்தும் விலகி கொண்டனர்.
விமர்சனம்
இப்போது முதல்முறையாக துணிந்து தேமுதிக ஒரு முடிவை எடுத்துள்ளது.. இந்த முடிவை ஆரம்பத்திலேயே எடுத்திருந்தால், இந்த அளவுக்கு அந்த கட்சிக்கு அவமானம் கிடைத்திருக்காது.. அளவுக்கு அதிகமாக அதிமுக தலைமையை விமர்சித்து, இன்னொரு பக்கம் திமுகவுடன் மறைமுக பேச்சுக்கு தூது நடத்தி, மற்றொரு பக்கம் சசிகலாவை புகழ்ந்து கொண்டு, என பல்வேறு வேலைகளில் தேமுதிக இறங்கியது அக்கட்சியின் பலவீனத்தையே பிரதிபலித்தது.
ஓபன் டாக்
ஒருவகையில் இந்த முடிவை வரவேற்கலாம்.. பண பற்றாக்குறை இருக்கிறது, அதனால்தான் கூட்டணிக்கு முயல்கிறோம் என்று பிரேமலதா நிலைமையை ஓபனாக சொல்லியும் இன்று தனித்து போட்டி என்று அறிவித்துள்ளது துணிச்சலான முடிவுதான்.. தொண்டர்களும் இதை வரவேற்கவே செய்கிறார்கள்.. நிர்வாகிகளுக்கும் ஒருவகையில் நிம்மதிதான்.
கட்டாயம்
எனினும், ஒருசில குறைபாடுகளை இனியாவது தேமுதிக களைந்து கொள்ள வேண்டி உள்ளது.. முதலாவதாக, கட்சியை பலப்படுத்தும் கட்டாயத்தில் உள்ளது.. விருப்ப மனு தாக்கலுக்கு முதல் நாள் ஆட்கள் வந்ததோடு சரி, மறுநாளில் இருந்து விருப்ப மனுவுக்கு வேட்பாளர்களை காணோம் என்றார்கள்.. அந்த அளவுக்கு பின்னடைவில் கட்சி உள்ளதால், உறுப்பினர் சேர்க்கை உட்பட பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
கெத்து
அதேபோல, 30 சதவீதம் வாக்குகள் வைத்திருக்கும் கட்சிக்கூட இந்த அளவுக்கு கெத்து காட்டியதில்லை.. மிக குறைந்த அளவு வாக்கு வங்கியை வைத்து கொண்டு, கூட்டணிக்கட்சிகளையும் மதிக்காமல், பணம் ஒன்றே குறிக்கோளுடன் இவ்வளவு காலம் இருந்த நிலைப்பாட்டை தேமுதிக இனியாவது மாற்றி கொள்ள வேண்டும்.. குறிப்பாக, விஜயகாந்தின் மகனெல்லாம் மற்றக்கட்சி தலைவர்களைப்பற்றி தேவையில்லாத கருத்துக்களை சொல்வதை ஏற்க முடியாது.. விஜயகாந்த்துக்காக இவ்வளவு நாள் கூட்டணி தலைவர்கள், மாற்று கட்சியினர் பொறுத்துபோனார்கள்.. இனி தனித்து போட்டியிடும்போது, தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இவருக்கு கடிவாளத்தை இப்போதே போடுவது அவசியம்.
போராட்டம்
இனி, மக்களுக்காக ஏதாவது போராட்டத்தை செய்ய இந்த கட்சி இறங்க வேண்டும்.. கூட்டணி பேரத்துக்காக இவ்வளவு நாள் மெனக்கெடுவது தமிழ்நாடே கண்கூடாக பார்த்து வருகிறது.. அதேசமயம், மக்கள் பிரச்சனையில் இப்படி ஒரு மெனக்கெடலை அந்த கட்சி நடத்தியதே இல்லை.. இந்த 4 வருட காலங்களில் மக்களுடன் மக்களாக நின்று விரல்விட்டு எண்ணக்வடிய போராட்டங்களையும் கையில் எடுத்தது இல்லை. சுதீஷூக்கு, விடாமல் ராஜ்ய சபா சீட் கேட்டு வரும்நிலையில், இதுவரை மக்களுக்காக செய்த போராட்டம் என்ன? தியாகம் என்ன? தமிழகத்திற்கு செய்த சாதனைகள் என்ன என்பதையும் இனியாவது எண்ணி பார்க்க வேண்டும்.
விஜயகாந்த்
தேமுதிகவில் விஜயகாந்த் தவிர யாரையும் மக்கள் மதிக்க தயாராக இல்லை.. முன்புபோல அவரால் பேசவோ, எழுந்து நீக்கவோ முடியாத நிலைமையும் இருக்கிறது... இப்படிப்பட்ட சூழலில் விஜயகாந்த்தை காட்டி வாக்கு வாங்குவதையும், மக்களால் ஜீரணிக்க முடியவில்லை.. விஜயகாந்த்துக்காக ஓட்டு விழுவதைவிட, மாறாக இது அதிருப்தி ஓட்டுக்களையே, வெறுப்பு ஓட்டுக்களையே பெற்று தந்துவிடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஒருகட்டத்தில் தேமுதிக மீது கோபத்தைகூட இது ஏற்படுத்தலாம்.. காரணம், விஜயகாந்த் உடல்நலன் மீது மக்களுக்கு உள்ள பாசம்.
சபாஷ்
2016-ல் தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் 2.39-ஆகவும், 2019 எம்பி தேர்தலில் 2.19%-ஆகவும் குறைந்து, இன்று அக்கட்சி தன்னுடைய கொடி, சின்னத்தையே இழக்ககூடிய அபாயத்தில் உள்ளது.. எனினும் அனைத்தையும் உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ள தேமுதிகவுக்கு ஒரு சபாஷ்..!