Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக பக்கம் தேமுதிக? அண்ணாமலை லண்டன் செல்வது தவறு? எச்சரிக்கும் ரவீந்திரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு தேமுதிக வந்துவிடும் என்று ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார். கூடவே அண்ணாமலை லண்டன் பயணம் மேற்கொள்வதால், அக்கட்சிக்கு என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதைப் பற்றியும் விளக்கியுள்ளார்.

சர்வதேச அரசியல் பற்றிப் படிப்பதற்காக இந்திய அரசியல் தலைவர்கள் சிலருக்கு லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்திருந்தது. அதையேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டன் செல்ல இருக்கிறார் எனச் செய்திகள் வெளியாகி இருந்தன. அங்கே அவர் 12 வாரங்கள் வரை தங்கி இருப்பார் எனத் தெரிகிறது. இந்தப் பயணம் பற்றி விளக்கமளிக்க முன்வந்த அண்ணாமலை, "கட்சித் தலைமை அனுமதி அளித்த பிறகே வெளிப்படையாகப் பேச முடியும்" என்று கூறியிருந்தார்.

Annamalai Ravindran Duraisamy

தேசிய தலைமை இவரை விடுவிப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாகப் பேச்சுகள் அடிப்பட்டன. முதலில் இவர் லண்டனில் 6 மாதங்கள் வரை தங்கி இருப்பார் என தகவல் கசிந்தது. இப்போது அவர் 12 வாரங்கள் தங்கி இருப்பார் எனக் கூறப்படுகிறது. அதாவது இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் அவர் தமிழகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில மாதங்கள் முன்பாகவே இந்தப் பயணத்தை அண்ணாமலை திட்டமிட்டிருந்தார். அவரது பதவிக்காலம் ஜூலையுடன் முடிவடைகிறது. ஆகவே, அடுத்து புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என பேச்சுகள் வலம் வந்து கொண்டுள்ளன. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் படுதோல்வியைச் சந்தித்தது. அதற்கு முன்பாக அவர் கொங்கு மண்டலத்தை முழுமையாக பாஜக கைப்பற்றும் என்று கூறியிருந்தார். ஒவ்வொரு ஊடக சந்திப்பின் போது தான் சொல்வதை அப்படியே எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் அடித்துப் பேசி வந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் பாஜக கூட்டணிக்கு கசப்பான செய்தியைக் கொடுத்தது.

இந்நிலையில்தான் அண்ணாமலை லண்டன் பயணத்திற்கு தயாராகி வந்தார். இந்தப் பயணம் பற்றியும், 2026 என்.டி.ஏ கூட்டணி கணக்குகள் பற்றியும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி சில வியூகங்களைக் கூறியுள்ளார். அவர் பேசும் போது, "பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி வர மாட்டார் என்றுதான் நான் முன்பு சொன்னேன். இப்போதும் அவர் 2026இல் பாஜக கூட்டணிக்கு வரமாட்டார் என்றுதான் சொல்கிறேன்.

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது எப்படி கருணாநிதி காத்திருந்தாரோ அதேபோல 25 வருடம் ஆனாலும் எடப்பாடி காத்திருப்பார். அவர் கட்சியைக் கைப்பற்றிவிட்டார். இரட்டை இலை அவர் கையில் இருக்கிறது. ஆகவே, அவர் கட்சி தன் கட்டுப்பாட்டிலிருந்தால் போதும் என்றே நினைக்கிறார். எனவே அவர் இறுதிவரை பாஜக கூட்டணிக்கு வர மாட்டார்.

Annamalai Ravindran Duraisamy

அதைப் புரிந்துகொண்டுதான் என்.டி.ஏ கூட்டணி 2026இல் தலைமையில் ஆட்சி அமையும் என்று டிடிவி தினகரன் சொல்லி இருக்கிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற டிடிவி தினகரன், அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் எடப்பாடி எடுத்து கொண்ட பிறகு, அரசியல் அடையாளம் இல்லாமல் இருந்தார். இப்போது மக்களவைத் தேர்தலில் டிடிவி 2வது இடத்திற்கு பாஜகவால் வந்துள்ளார். அதிமுகவை 3ஆவது இடத்திற்குத் தள்ளியுள்ளார்.

அவருக்கு இப்போது அரசியல் முகம் கிடைத்துவிட்டது. எவ்வளவு அவர் முயற்சி செய்தும் சிறுபான்மையினர் ஓட்டு அவருக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் பாஜக யாரால் தோற்கடிக்க முடியும் என யோசித்துப் பார்த்துவிட்டு திமுகவைத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்பதை டிடிவியும் புரிந்து கொண்டுவிட்டார். ஆகவே அவர் பாஜகவுக்கு வந்ததே நல்லது.

அப்படிப் பார்த்தால் இந்தக் கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக அண்ணாமலையைப் பிரதமர் மோடி முன்னிறுத்துவார். அடுத்ததாக பண்ருட்டி ராமச்சந்திரனை முதல்வராக்க வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு 18% வன்னியர்கள் வாக்களித்துள்ளார். அதிமுக 2 ஜாதிகளின் கட்சியாகத்தான் இருக்கிறது. ஆகவே, பண்ருட்டியைப் போடுவதால், எடப்பாடியிடம் இருந்து 8% வாக்குகளை பாஜக கூட்டணி இழுக்க முடியும்? இதனால் அதிமுக 3ஆவது இடத்திற்குத் தள்ளப்படும். நான் மோடி ஆதரவாளன்.

ஆகவே, அவருக்கு நலன் தரும் ஒரு திட்டத்தைத்தான் சொல்வேன். ஓ.பன்னீர்செல்வம் அல்லது சீமான் கூட என்.டி.ஏ கூட்டணி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வாய்ப்பு உள்ளது. எப்படி பாஜக எதிர்ப்பு பேசிவந்த நிதிஷ்குமார் கூட்டணிக்குள் இழுக்கப்பட்டாரோ அதேபோல் சீமான் இழுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

2026இல் தேமுதிக பாஜக கூட்டணிக்குள் வரும். பிரேமலதா விஜயகாந்த் மத்திய பட்ஜெட்டை ஆதரித்துள்ளார். ஆகவே, அந்த மாற்றம் நடக்கும். அதேபோல் திமுக கூட்டணிக்குள் புதிய தமிழகம் போக வாய்ப்பு உள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் இடையே ஊடல் இருந்தாலும் கூட்டணியில் பிளவு இருக்காது. எடப்பாடி பழனிசாமி தனிமைப்படுத்தப்படுவார். அவரை நம்பி யாரும் கூட்டணிக்கு வரமாட்டார்கள்" என்று பேசியுள்ளார்.

சில வாரங்களாக அண்ணாமலை லண்டன் போவது பற்றிய விவாதங்கள் நடந்து வருவது பற்றித் தொடர்ந்து பேசிய ரவீந்திரன் துரைசாமி, "அண்ணாமலை தனது லண்டன் பயணத்தைத் தள்ளிப் போடுவது நல்லது. அது கட்சிக்கும் அவருக்குமே நல்லது. 2026க்குப் பின்னர் அவர் லண்டன் பயணம் பற்றி யோசிக்கலாம். அண்ணாமலைக்குப் பதிலாக யார் போடப்பட்டாலும் அவர்கள் மாநிலத் தலைவராகத் தான் இருக்க முடியும். அண்ணாமலை அப்படி இல்லை. அவர் ஒரு தலைவராகிவிட்டார். ஒரு தலைவர் பாஜகவின் மாநிலத் தலைவராக இருப்பதுதான் கட்சிக்குத்தான் நல்லது" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+