தேமுதிக துணிந்து இறங்க இதான் காரணமா? கணக்குக்கு ‘வேட்டு’ வைக்கும் ரிசல்ட்.. ‘SWOT’ அலசும் அனலிஸ்ட்!
களத்தில் நிற்பதற்கான வலிமை தேமுதிகவுக்கு இல்லை என்ற பிம்பத்தை உடைப்பதற்காகவே தேமுதிக போட்டியிடுவதாக அரசியல் ஆய்வாளர் கூறுகிறார்.
சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடாமல் தவிர்த்துவிட்ட நிலையில், தேமுதிக துணிந்து களமிறங்குவதற்கான காரணம் என்ன என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தேமுதிகவின் SWOT பற்றி ஒன் இந்தியா தமிழுடன் இணைந்து அலசுகிறார் Political Analyst ஜெகதீஸ்வரன்.
தேமுதிக சார்பில் ஆனந்த் என்பவர் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில், சமூக பின்புலம், கட்சி செல்வாக்கு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என அலசுகிறார் ஜெகதீஸ்வரன்.
தேமுதிகவின் பலம், பலவீனங்கள், வாய்ப்புகள், பிரச்சனைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

தேமுதிக பலம்
1. ஏற்கனவே ஒருமுறை தேமுதிக இங்கு வெற்றி பெற்றிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியின் முதல் எம்.எல்.ஏவே தேமுதிகவை சேர்ந்தவர்தான்.
2. கொங்கு மண்டலத்தில் இயல்பாகவே விஜயகாந்திற்கு இருக்கும் செல்வாக்கு.
3. ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது.
4. விஜய பிரபாகரன், எல்.கே.சுதீஷ் ஆகியோரின் பிரச்சாரம் தேமுதிகவிற்கு பலம்.

தேமுதிக பலவீனங்கள்
1. தொடர் தோல்விகளால் தொண்டர்கள் சோர்வடைந்திருப்பது தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்படுத்தும்.
2. மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்டபோதே குறைவான வாக்குகளை வாங்கியதால் ஏற்பட்டிருக்கும் நெகட்டிவ் இமேஜ்.
3. ஈரோடு கிழக்கு தொகுதியில் கட்சி அமைப்பு ரீதியாக பலவீனமடைந்திருப்பது.
4. 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அமமுக ஈரோடு கிழக்கில் நோட்டாவை விட குறைவான வாக்குகளை வாங்கியது.
5. தேர்தல் பிரச்சாரத்தில் வாய்ஸ் கொடுக்க முடியாது அளவில் இருக்கும் விஜயகாந்த்தின் உடல்நிலை.

தேமுதிகவுக்கான வாய்ப்புகள்
1. பல தேர்தல்களுக்குப் பிறகு தேமுதிக தனித்துக் களமிறங்குகிறது.
2. மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடாதது தேமுதிகவின் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
3. இந்த இடைத்தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வாக்குகளைப் பெற்றால் 2024ல் கூட்டணி அமைப்பதற்கான பேர வலிமையை அதிகரிக்கும்.
4. திமுக, அதிமுகவுக்கு வாக்களிக்க விரும்பாத மக்கள் வாக்களிப்பதற்கான ஆப்ஷனாக தேமுதிக இருக்கிறது.

பிரச்சனைகள்
1. இந்த இடைத்தேர்தலில் தேமுதிக மோசமான தோல்வியைச் சந்தித்தால், அது அக்கட்சியின் தொண்டர்களை இன்னும் சோர்வடையச் செய்யலாம்.
2. கொங்கு பகுதி வாக்குகளுக்காக திமுக, தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கலாம் என்ற பேச்சுகள் எழுந்த நிலையில், அந்த வாய்ப்பு கைவிட்டுப் போகலாம்.
3. பிரேமலதா, விஜய பிரபாகரன் ஆகியோர் முன்னின்று பணியாற்றும் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் முடிவு அவர்கள் ஆளுமைக்கும் பின்னடைவை ஏற்படுத்தலாம்.
4. 2021ல் அமமுக நோட்டாவுக்கு குறைவாக வாக்குகள் பெற்றது போன்ற நிலை ஏற்பட்டால் தேமுதிகவின் எதிர்காலமே கேள்விக்குறியாகலாம்.

தேமுதிக - SWOT
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிகவின் Strength, Weakness, Opportunities, Threats பற்றி நமது ஒன் இந்தியாவுடன் அரசியல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரன் அலசுகிறார்.
நாம் முன்வைத்துள்ள பிளஸ், மைனஸ் குறித்து ஜெகதீஸ்வரன் பேசுகையில், அதிமுக நான்காகப் பிரிந்து கிடக்கிறது, பாஜக தனியாகக் களமிறங்கவில்லை, அமமுக போட்டியிடவில்லை, இதனால் தேமுதிகவின் பலம் என்ன என்பதை டெஸ்ட் செய்து பார்ப்பதற்காக தேமுதிக இந்த இடைத்தேர்தலில் களமிறங்குகிறது. அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தங்கள் வாக்கு பலம் என்ன என்பதை நிரூபிகும் களமாக இந்த இடைத்தேர்தலைப் பார்க்கிறது தேமுதிக. இன்னும் விஜயகாந்தை நம்பியே தேமுதிக களமிறங்குகிறது. விஜயகாந்த் எனும் பெயருக்கு மக்கள் மத்தியில் இப்போது என்ன பலம் இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காகவே இந்த தேர்தலில் களமிறங்குகிறது தேமுதிக.

தேமுதிகவின் வாக்கு பலம்
2011ல் அதிமுக கூட்டணியில் நின்று வென்றிருந்தாலும், இயல்பாகவே தேமுதிகவுக்கு ஓரளவுக்கு பலம் இருந்தது. முத்துசாமியை எதிர்த்து நின்று விசி சந்திரகுமார் வெற்றி பெற்றார். முரசு சின்னத்திற்கான ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. விஜயகாந்த்திற்கு வட மாவட்டங்களைப் போலவே கொங்கு மண்டலத்திலும் நல்ல வாக்கு வங்கி இருக்கிறது. 2011ல் தேமுதிகவில் நின்று வென்ற சந்திரகுமார் இப்போது திமுகவுக்கு வந்துவிட்டார். அப்போது இருந்ததை விட தேமுதிகவின் வாக்கு பலம் சரிந்துவிட்டது என்றாலும், இப்போதும் ஓரளவுக்கு வலிமை இருக்கவே செய்கிறது. சமூக வாக்குகள் அதிகம் இருப்பதையும் கருத்தில் கொண்டே ஆனந்த்தை வேட்பாளராக தேமுதிக களமிறக்கி இருக்கிறது. அதேசமயம், திமுக வீக்காக இருக்கும் புள்ளிகளை எல்லாம் ஸ்ட்ராங் ஆக்குகிறது. முதலியார் வாக்குகளை கவர்வதற்காக சபரீசன் களமிறக்கப்பட்டுள்ளார். அதைத் தாண்டி முதலியார் சமூக வாக்குகளை ஓரளவுக்குப் பெற தேமுதிகவுக்கு வாய்ப்புள்ளது.

விஜயகாந்த்தின் செல்வாக்கு
விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாவிட்டாலும், அவர் தொகுதிக்குள் வந்து கையசைத்துவிட்டுப் போனால் கூட அதுவே பெரிய தாக்கத்தைக் கொடுக்கும். பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொள்வது தேமுதிக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உற்சாகம் தருமே தவிர, விஜயகாந்த் வருகைக்கு நிகராக ஓட்டுகளை கேன்வாஸ் செய்ய முடியாது. தேமுதிக, மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதும், அறிக்கை வெளியிடுவதும் கூட குறைந்துவிட்டது. முன்பு போல ஆக்டிவாக அரசியலில் ஈடுபடாமல் இருக்கும் தேமுதிக, தேர்தலில் மட்டும் தீவிரமாகக் களமிறங்குவது பெரிய விளைவை ஏற்படுத்தாது.

பின்னடைவு
விஜயகாந்த்தின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு என்பது கடந்த தேர்தல்களிலும் தேமுதிகவுக்கு பெரும் பின்னடைவுதான். இதுவே விஜயகாந்த்தின் உடல்நிலை நன்றாக இருந்திருந்தால் 2019, 2021 தேர்தல்களின் ரிசல்ட் வேறு மாதிரியாக இருந்திருக்கும். விஜயகாந்த் உடல் நலத்துடன் இருக்கும்போது, பல்வேறு இடங்களில் கட்சி மாநாடுகளை நடத்துவார். கூட்டணி அமைப்பது தொடர்பான முடிவுகளை தொண்டர்களுடன் ஆலோசிப்பார். கிங் ஆகலாமா? கிங் மேக்கர் ஆகலாமா? என்ற முடிவையெல்லாம் அப்படித்தான் எடுத்தார் விஜயகாந்த். இன்று மிஞ்சிப்போனால் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு தமிழ்நாடு முழுவதும் பேனர் வைக்கிறார்களே தவிர தொண்டர்கள் மத்தியில் பெரியளவில் உற்சாகம் இல்லை. தேர்தல் சமயத்தில் தான் கட்சி இருப்பதே தெரிகிறது.

சரிவுக்கு காரணம்
2009ல் 10 சதவீதம் வரை வாக்குகளை வைத்திருந்த தேமுதிக இன்று 2 சதவீதத்திற்கும் கீழே சென்றுவிட்டது. தொடர் தோல்விகளால், கூட்டணிக்காக காத்திருக்கும் கட்சியாக தேமுதிக மாறிவிட்டது. ஒருபக்கம் திமுகவுடனும், இன்னொரு பக்கம் அதிமுகவுடனும் கூட்டணி பேரம் பேசிக் கொண்டிருந்தது அதன் வலிமையைக் குறைப்பதாக அமைந்தது. நகரம் முதல் கிராமப் பகுதிகள் வரை 6 அடுக்குகளிலும் தொண்டர்கள் பலத்தைக் கொண்டிருந்த தேமுதிகவின் நிலை இன்று பரிதாபகரமானதாகி விட்டது. ரசிகர் மன்றங்கள் கட்சி அமைப்புகளாக மாறியதால் எளிதாக கட்டமைக்கப்பட்ட அந்த பலம் இன்று பலவீனமாகிவிட்டது. 2016 தேர்தலுக்குப் பிறகு பலர் அதிமுகவிலும், திமுகவிலும் போய் சேர்ந்துவிட்டனர். இதனால், தேமுதிக அமைப்பு ரீதியாக உடைந்து பலம் குன்றிவிட்டது. இதெற்கெல்லாம் மூலகாரணம் விஜயகாந்த்தின் உடல் நலம் குன்றியதுதான்.

தோல்வி உறுதி - தெரிந்தும் நிற்க காரணம்
இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிக்குப் பிறகு நான்காவது இடத்தைத் தான் தேமுதிக பெறும். டெபாசிட் வாங்குவதற்கான வாய்ப்புகளும் மிகக்குறைவு. இதனால், பேர வலிமையும் குறையக்கூடும். இதையெல்லாம் மீறி ஏன் தேமுதிக நிற்கிறது என்றால், ஒருவேளை ஓரளவுக்கு வாக்குகளை பெற்றுவிட்டால் அதுவே கட்சி, வளர்ச்சியை நோக்கிச் செல்லத் துணைபுரியும் எனக் கருதலாம். அன்று விஜயகாந்த் தனித்து நின்றது தேமுதிகவுக்கு பலமாக இருந்தது. இன்று தேமுதிக தனித்து விடப்பட்டுள்ளது. எந்தக் கட்சியும் தேமுதிகவை ஆதரிக்கத் தயாராக இல்லை. தேமுதிக இந்த தேர்தலில் நிற்காவிட்டால், தேர்தல் அரசியலில் இருந்து காணாமல் போனதாக கருதப்படும் நிலை இருக்கிறது. களத்தில் நிற்பதற்கான வலிமை தேமுதிகவுக்கு இல்லை என்ற பிம்பத்தை உடைப்பதற்காகவே தேமுதிக களத்தில் நிற்கிறது என்று நினைக்கிறேன்.

இருப்பை நிறுவ
திமுகவை தாண்டி அதிமுகவுக்கு வாக்களிப்பது இந்த ஆட்சியின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவது. அதைத் தாண்டி நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளிப்பவர்கள் கொள்கை ரீதியாக ஈர்க்கப்பட்டவர்களாக இருப்பார்கள். தேமுதிகவுக்கு வாக்களிக்க அப்படி எந்த பிரதான காரணமும் இல்லை. தேமுதிகவுக்கு வாக்களிப்பதால் என்ன மாறப்போகிறது என்ற கேள்வி இருக்கிறது. தேமுதிக கொள்கைத்தெளிவு இல்லாமல் விஜயகாந்த் என்ற ஆளுமையை நம்பி இறங்கிய கட்சி, அந்த ஆளுமை சரியும்போது என்ன நடக்கும் என்பதையே இந்த கட்சியின் சரிவு மூலம் பார்க்கிறோம். பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த்தின் இடத்தை நிரப்ப முயற்சித்து வருகிறார். ஆனால், உறுதியான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டியது அவசியம். விஜய பிரபாகரன் கட்சிக்காக உழைக்கத் தயாராக இருப்பதை களத்தில் இறங்கி இருப்பை வெளிப்படுத்த வேண்டும்.

திமுக உடன் கூட்டணி?
தேமுதிக இந்த இடைத்தேர்தலில் மிகக்குறைவான வாக்குகளையே பெற வாய்ப்புள்ளது. அதையும் தாண்டி தேமுதிக போட்டியிடுவது தங்கள் இருப்பை நிறுவத்தான். கொங்கு மண்டலத்தில் பலம் பெற தேமுதிகவை கூட்டணியில் இணைக்கும் முடிவை இந்த இடைத்தேர்தல் முடிவை வைத்து திமுக மாற்றிக்கொள்ளும் என எனக்குத் தோன்றவில்லை. 2024 தேர்தலில் ஏதோவொரு வகையில் தங்கள் வலிமை குறைந்திருக்கிறது என திமுக கருதினால் அந்த நேரத்தில் தேமுதிகவை சேர்த்துக்கொள்ளவே வாய்ப்பு அதிகம். விஜயகாந்த் ஆதரவு வாக்குகள் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே தேவை என்ற நிலை இருக்கிறது என ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications