எப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.. தேமுதிகவின் அங்கீகாரமும் போச்சு!
தேமுதிகவின் அங்கீகாரம் ரத்தாகும் தநிலை ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: விஜயகாந்த் பட்ட கஷ்டமெல்லாம் வீணாகப் போகிறது. தமிழகத்து அரசியல் ஜாம்பவான்களை எல்லாம் அலற வைத்தார் விஜயகாந்த். ஆனால் இன்று அவர் கண்ட கட்சி தனது மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பறி கொடுத்துள்ளது.
மாநிலக் கட்சிக்கான அங்கீகாரம் பெற தேர்தல் ஆணையம் சில விதிகளை வகுத்துள்ளது. அதன்படி பதிவான வாக்குகளில் குறைந்தது 6 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். இந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்ய தேமுதிக தவறி விட்டது. இதனால் அதன் மாநிலக் கட்சி அங்கீகாரம் பறி போகிறது.
தேமுதிகவின் இந்த நிலைக்கு வேறு யாரும் காரணம் அல்ல. மாறாக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது தம்பி சுதீஷ் எடுத்த தவறான முடிவுகளே காரணம் என தேமுதிகவினரே வருத்தப்பட்டு சொல்கிறார்கள்.

தைரியம்
திமுக,அதிமுக என இரு பெரும் கட்சிகள் முழு வீச்சில் மோதிக் கொண்டிருந்தபோது தைரியமாக கட்சி ஆரம்பித்தவர் விஜயகாந்த். ஒரே சமயத்தில் இரு பெரும் தலைவர்களை எதிர்ப்பதெல்லாம் அப்போது சாத்தியமே இல்லாததாக பார்க்கப்பட்டபோது தில்லாக களம் குதித்தார் விஜயகாந்த். சூறாவளியாக மாறி தமிழகத்தை சுற்றி வந்தார்.

வாக்குகள்
2006 சட்டசபைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி சேராமல் தனியாகப் போட்டியிட்டார் விஜயகாந்த். அத்தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் 27 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று அதிர வைத்தார். அவர் மட்டும் வென்றார். அத்தேர்தலில் விஜயகாந்த் கட்சிக்கு கிடைத்த வாக்கு சதவீதம் 8.33 ஆகும். அடுத்து 2009 லோக்சபா தேர்தலில் மீண்டும் தனித்துப் போட்டியிட்டார் விஜயகாந்த். இத்தேர்தலில் அவரது கட்சிக்கு 10.3 சதவீத வாக்குகள் கிடைத்தன. பல பெரிய கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளை தேமுதிக சிதறடித்தது. ஆனால் அதன் பிறகுதான் தேமுதிக தடம் மாற ஆரம்பித்தது. கூட்டணி அரசியல் பக்கம் திரும்பியது.

எதிர்க்கட்சி தலைவர்
பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் அதிமுகவுடன் கூட்டணி வைக்க ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து கட்சியினரின் கருத்தைக் கேட்டு 2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் விஜயகாந்த். எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். ஆனால் அவரது கட்சியின் வாக்கு சதவீதம் 7.9 ஆக குறைந்து போய் விட்டது.

வாக்கு சதவீதம்
அடுத்து அதிமுகவுடன் மோதினார். கட்சி கலகலத்துப் போனது. பலவீனமாக மாறியது தேமுதிக. 2015 லோக்சபா தேர்தலில் பாஜக, பாமகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது தேமுதிக. இத்தேர்தலில் போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் தோல்விதான். வாக்கு சதவீதமும் 5.1 சதவீதமாக இறங்கிப் போனது. இத்தனைக்கும் இது மெகா கூட்டணியாக அமைந்தது.

கூட்டணி
2016ல் தேமுதிகவுக்கு புத்துயிர் கொடுக்க திமுக முயன்றது. திமுக தலைவர் கருணாநிதி, விஜயகாந்த்தை கூட்டணிக்குள் கொண்டு வர கடுமையாக முயன்று பார்த்தார். ஆனால் மக்கள் நலக் கூட்டணி என்ற வலைக்குள் போய் சிக்கிக் கொண்டார் விஜயகாந்த். வாக்கு வங்கி மேலும் சரிந்து 2.39 ஆக இறங்கிப் போய் விட்டது.

படுமோசம்
இப்போது இன்னும் மோசமாகி விட்டது நிலைமை. பாஜக, அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, சேருவதற்கு முன்பு செய்த பிடிவாதங்கள், பந்தா, பேரம் உள்ளிட்டவை மக்களை முகம் சுளிக்க வைத்து விட்டன. மக்கள் தேமுதிகவை தூக்கி போட்டு விட்டனர். வெறும் 2.19 சதவீத வாக்குகளுடன் படு மோசமான நிலைக்குப் போய் விட்டது தேமுதிக.

பிரேமலதா
அத்தனை அரும்பாடுபட்டு கட்சியை உருவாக்கி வளர்த்துக் கொண்டு வந்தார் விஜயகாந்த். ஆனால் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோரின் தவறான முடிவுகள், வழிகாட்டுதல்கள், உரிய நேரத்தில் எடுக்கத் தவறிய முடிவுகள், கொள்கையே இல்லாமல் எல்லாக் கட்சியுடனும் பேரம் பேசியது என்று தேமுதிகவை மக்கள் அருவெறுக்கத்தக்க கட்சியாக மாற்றி விட்டார்கள். தற்போது மாநிலக் கட்சி அந்தஸ்து பறி போவதால் முரசு சின்னமும் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சாத்தியமா?
விஜயகாந்த் பலம் பெற்று, உடல் நலம் சரியாகி மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக வந்தால் மட்டுமே தேமுதிக உயிர் பெற வாய்ப்புள்ளது. பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் போன்றோர் எல்லாம் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் கிடையாது, போராட்டங்கள் செய்பவர்கள் கிடையாது, மக்களுடன் நிற்பவர்களும் கிடையாது. எனவே இவர்களால் தேமுதிகவை மீண்டும் உயிர் பெற வைக்க சாத்தியம் இல்லை என்கிறார்கள்.
பாவம் விஜயகாந்த், வேறென்னத்த சொல்ல!












Click it and Unblock the Notifications