மண்ணின் மைந்தர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜெயிலா?.. முதல்வருக்கு கடிதம் எழுதி விலகிய திமுக உறுப்பினர்!
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டித்து திமுகவிலிருந்து விலகுவதாக 15 ஆண்டு கால உறுப்பினர் ஒருவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ 3 கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் தலைமறைவானார்.

20 நாட்கள்
அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் 20 நாட்கள் கழித்து அவர் கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் விருதுநகருக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

திருச்சி சிறையில் ராஜேந்திர பாலாஜி
அதன்படி மதுரை மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்ட ராஜேந்திர பாலாஜியை பாதுகாப்பு காரணம் கருதி அவர் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார். இவர் கைது செய்யப்பட்ட அடுத்த நாளே இவரது முன்ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்குள் என்ன அவசரம் என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதில் ஏன் இத்தனை தீவிரம் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

திமுக உறுப்பினர் கண்டனம்
ராஜேந்திர பாலாஜிக்கு தெரியாமல் அவரது உதவியாளர்கள்தான் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாகவும் அவரது கைதை கண்டித்தும் திமுக பிரமுகர் ஒருவர் கட்சியிலிருந்து விலகுவதாக கடிதம் அளித்துள்ளார்.

காழ்ப்புணர்ச்சி
சிவகாசியை அடுத்த அனுப்பன்குளம் கிராமம அருகே உள்ள ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவர் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நான் திமுகவில் கடந்த 15 ஆண்டுகளாக இருக்கிறேன். எங்களது மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அவருக்கு முன்ஜாமீன் கிடைக்காமல் செய்தும், அவரை சிறையில் வைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சிறையில் அடைத்து இருப்பது எங்கள் பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவிலிருந்து விலகல்
அவரது காலத்தில் பல நல்ல காரியங்களைச் செய்துள்ளார்.
பட்டாசு தொழிலாளர்களுக்கு, பட்டாசு தொழிலுக்கும் உருதுணையாக இருந்தார். அவர் எங்கள் மண்ணின் மைந்தர். எனவே, இந்த சம்பவம் எனது மனதை வேதனைப்படுத்திவிட்டது. எனவே, கட்சி நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் திருப்தி இல்லையென்பதால் நான் எனது உறுப்பினர் கார்டை சரண்டர் செய்கிறேன். நான் நமது கட்சியில் இருந்து விலகிகொள்கிறேன் என விநாயகமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications