ம்ஹூம்.. முடியாது.. மாரியாத்தா மேல சத்தியம் பண்ணுங்க".. ஜெர்க் தந்த திமுக வேட்பாளர்.. பகீரான பெண்கள்
அதிமுக, திமுக வேட்பாளர்கள் நூதன முறையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்
சென்னை: தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தொகுதிகளில் வேட்பாளர்கள் தீவிரமாக ஓட்டு கேட்டு வருகிறார்கள்.. அந்த வகையில், பொதுமக்களை வேட்பாளர்கள் இயல்பாகவே கவர்ந்தும் வருகிறார்கள்.
இந்த முறை திமுக, அதிமுக படு சீரியஸாக களத்தில் இறங்கி உள்ளது.. 2 பேருமே சமபலத்தில் இருப்பதாக சில கணிப்புகள் சொல்கின்றன...
திமுகதான் அடுத்த முறை கட்டாயம் ஆட்சியை பிடிக்கும் என்று வேறு சில கணிப்புகளும் சொல்கின்றன. எனினும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்தந்த கட்சி வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிக்கிறார்கள்.
விந்தியா
இவர்களுக்கு உறுதுணையாக நட்சத்திர பேச்சாளர்களும் உதவி வருகிறார்கள்.. மச்சான்ஸ்.. தாமரக்கு வோட் போடுங்க என்று நமீதா தன் பாணியில் வாக்கு சேகரிக்கிறார்.. வராத பழமொழிகளை வரவழைத்து தெலுங்கு வாடையுடன், விந்தியா வாக்கு கேட்டு வருகிறார்.. அதேசமயம், மறக்காமல் முக ஸ்டாலினையும் விமர்சித்து வருகிறார். நடிகை ஷகீலா இன்னைக்குதான் பிரச்சாரம் செய்ய போறாராம்.. அவர் என்ன பேச போகிறாரோ, தெரியவில்லை.
அசத்தல்
ஆனால், சில தொகுதிகளில் நட்சத்திர பேச்சாளர்களைவிடவும் வேட்பாளர்களே, தங்களுக்கான வாக்குகளை சேகரிக்கும் விதத்தில் அசத்திவிடுகிறார்கள்.. இப்படித்தான் மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கி.காசிராமன் ஓட்டு கேட்டு வந்தார்.. ரோட்டில் வந்து கொண்டே இருந்தவர், திடீரென ஒரு அரிவாளை எடுத்து, அங்கிருந்த கருவேல மரங்களை சரசரவென வெட்டி வீழ்த்த ஆரம்பித்துவிட்டார்.. இறுதியில், "இயற்கையைப் பாதுகாப்போம்" என்று முழங்கியதை மக்கள் அப்படியே மிரண்டு பார்த்தனர்.
வாக்காளர்
அதுபோல, நாகப்பட்டினத்தில், அதிமுக வேட்பாளர் கதிரவன், ஒரு பெண்ணுக்கு துணி துவைத்து தந்து ஓட்டு கேட்டார்.. அந்த பெண் துவைத்து கொண்டிருந்த துணியை வாங்கி, துணி சோப்பு போட்டு, அடித்து துவைத்து, காய வைத்து கொண்டே, "ஏம்மா இரட்டை இலைக்கு மறக்காம ஓட்டு போட்டுடும்மா" என்று கேட்டார்.
கிருஷ்ணகிரி
அதுபோலவே இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக சார்பில் எம்எல்ஏ செங்குட்டுவன் போட்டியிடுகிறார்... இப்போது கிராமபுறங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.. நீட்டி முழக்கியும், தூய தமிழிலும் கிராமப்புற மக்களிடம் பேசினால் எடுபடாது என்று நினைத்து, வட்டார மொழிலேயே வாக்கு கேட்டார்.. சத்தியமா உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு போடுவீங்களா என்று பெண் வாக்காளர்களிடம் கேட்டார்.. அதற்கு அவர்கள் கண்டிப்பாக போடுவோம் என்றனர்..
கலகலப்பு
அப்போதும் அவர் விடவில்லை..அங்கிருந்த மாரியம்மன் கோயிலை காட்டி, அதோ அந்த மாரியாத்தா மேல சத்தியமா ஓட்டு போடுவீங்களா என்று கேட்டு மொத்த பேரையும் கலகலக்க வைத்தார். உடனே ஒரு பெண், நீங்க அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்து போச்சுன்னு சொல்றீங்களே, நீங்க ஆட்சிக்கு வந்தால் இந்த விலையை கம்மி பண்ணுவீங்களா? என்று கேட்டார்.. உடனே அந்த வேட்பாளர், ஏம்மா, நம்புங்கம்மா.. இதுக்கெல்லாம் பத்திரமா எழுதி தர முடியும்? என்றார்.. இப்படி தமிழக தொகுதிகள் கலகலவென காட்சி அளித்து கொண்டிருக்கின்றன.