"ஆட்சியில் பங்கு" காங்கிரஸ் கட்சியிடம் தெளிவாக சொன்ன திமுக.. அறிவாலயத்தில் நடந்த சம்பவம்!
சென்னை: ஆட்சியில் பங்கு என்ற பேச்சிற்கே இடமில்லை என்று திமுக தலைமை கூட்டணி கட்சிகளிடம் தெளிவாக கூறிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தரப்பில் தொடர்ந்து ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டு வந்த சூழலில், சில நாட்களுக்கு முன் ஸ்டாலின் - ப.சிதம்பரம் சந்திப்பின் போது இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாட்டில், "ஆட்சியில் பங்கு" என்று விஜய் அறிவித்தார். அப்போது முதலே தமிழக அரசியலில் கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு என்ற வார்த்தைகள் தொடர்ச்சியாக ஒலித்து வருகின்றன. விஜய்யுடன் பெரிதாக யாரும் கூட்டணியில் இணையவில்லை என்றாலும், திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் ஆட்சியில் பங்களிக்க வேண்டும் என்ற சலசலப்பு தொடங்கி இருக்கிறது.

விசிகவின் நீண்ட நாள் கோரிக்கையாக ஆட்சியில் பங்கு என்பது இருந்து வந்தாலும், திருமாவளவன் இம்முறை ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை வைக்கப் போவதில்லை என்று தெரிவித்துவிட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் ஆட்சியில் பங்கு என்று தொடர்ச்சியாக திமுகவை நெருக்கி வருகின்றனர்.
பீகார் தேர்தலுக்கு பின் அமைதி காத்த காங்கிரஸ் நிர்வாகிகள், கேரளா உள்ளாட்சி தேர்தல் வெற்றியால் உற்சாகம் அடைந்தனர். இதன்பின்னரே மீண்டும் ஆட்சியில் பங்கு அளிக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை உட்பட பலரும் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்த விவகாரம் காங்கிரஸ் தேசிய தலைமை வரை சென்றுவிட்டது. அப்படி இல்லையென்றால், தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் சிலர் பேசத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் - ப.சிதம்பரம் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது திமுகவின் நிலைப்பாட்டை ஸ்டாலின் நேரடியாக கூறிவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியில் உள்ள உட்கட்சி பிரச்சனையால் தொகுதி ஒதுக்கீட்டில் திமுகவுக்கு உள்ள சிக்கல்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
அதேபோல் காங்கிரஸ் தேசிய தலைமை திமுகவுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புவதாக ப.சிதம்பரம் கூறி இருக்கிறார். விரைவில் தொகுதி பங்கீட்டு குழுவை அமைக்கவும் வலியுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் திமுகவின் நிலைப்பாட்டை கூட்டணி கட்சிகளிடமும் திமுக தலைமை தெளிவாக விளக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் நெருங்கும் சூழலில், ஆட்சியில் பங்கு என்ற விவகாரம் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், திமுக தனிப் பெரும்பான்மை பெறாது என்ற தவறான பிம்பத்தை உருவாக்கும் என்று திமுகவினர் கூட்டணி கட்சிகளிடம் பேசி இருக்கின்றனர். அதேபோல் தொகுதிப் பங்கீட்டில் சில சமரசங்களை செய்து கொள்வோம் என்று திமுக தரப்பில் கூறியதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications