நிதி ஒதுக்க மறுத்த மத்திய அரசு! வெகுண்டெழுந்த திமுக கூட்டணி கட்சிகள்.. சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்
சென்னை: மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று மாலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர். தேசியக் கல்விக் கொள்கை, பட்ஜெட், யுஜிசி விதி, மும்மொழி கொள்கையை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக அமைச்சர் துரைமுருகன், வீரமணி, செல்வப்பெருந்தகை, வைகோ உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் தான் தமிழகத்திற்கு நிதி தருவோம் என்று மத்திய அமைச்சர் கூறியதற்கு திமுக மட்டுமின்றி கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மத்திய பட்ஜெட், மும்மொழி கொள்கை, யுஜிசி விதி, மத்திய பட்ஜெட் என எல்லாவற்றிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும் திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக இன்று மாலை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த திமுக கூட்டணி கட்சிகள் முடிவு எடுத்தன. அதன்படி இன்று மால 4.00 மணியளவில் திமுக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக சார்பில், அமைச்சர் துரைமுருகனும், திராவிட கழகம் சார்பில் வீரமணியும், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகையும், மதிமுக வைகோ, பெ சண்முகம், காதர் மொய்தீன், அருணாச்சலம், ஜவாஹிருல்லா, ஈ ஆர் ஈஸ்வரன், வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக அறிவித்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் உரிமைகளை சிதைப்பதற்கான எல்லா வேலைகளையும் மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கான நிதியை தருவதில் பாரபட்சம், பதவிக்காலம் முடிந்த ஆளுநரை வைத்துக்கொண்டு அத்துமீறலில் ஈடுபடுவது, மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிப்பது என தமிழகத்தை வஞ்சிக்கும் செயலிலேயே ஈடுபடுகிறது.
இந்த வஞ்சக செயலில் ஈடுபட முயற்சிக்கும் பாஜக அரசை எதிர்த்து போராட வேண்டியுள்ளது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழகத்தை வீழ்த்திட மத்திய பாஜக அரசு முயற்சி செய்வதாகவும், வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும். மத்திய பாஜக அரசை கண்டித்து முதல்கட்டமாக அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை மாலை 4 மணிக்கு சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications