துரைமுருகனை பேச்சைக் குறைக்க சொல்லி.. கொந்தளித்த கூட்டணிக் கட்சிகள்... எடுபடாத சமாளிப்பு அறிக்கை..!
சென்னை: திமுக கூட்டணி தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டி தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
70 ஆண்டுகால பாரம்பரியமிக்க ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர் இப்படித்தான் பொதுவெளியில் நாகரீகமற்ற முறையில் பேசுவதா என, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கொதித்தெழுந்துள்ளன.
அதன் எதிரொலியாக தான் துரைமுருகன் வருத்தம் கோரி அவசர அறிக்கை ஒன்றை இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்டார்.
ஹத்ராஸ் கொடுமை.. நீதி கேட்டு ஆளுநர் மாளிகை நோக்கி கனிமொழி தலைமையில் இன்று திமுக ஒளியேந்திப் பேரணி
நக்கல் நையாண்டி
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை பொறுத்தவரை காலமெல்லாம் பிறரை நக்கலும், நையாண்டியும் செய்யும் வழக்கம் உடையவர். அவரது கிண்டலுக்கு ஆளாகாத தலைவர்களே (ஸ்டாலின் உட்பட) தமிழகத்தில் இல்லை. எப்போதும் தாம் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமிகுதியில் அவர் அடிக்கும் ஜோக்குகள் ஏராளம். இவரது பேச்சு சில நேரங்களில் விளையாட்டாகவும் இருக்கும் வினையாகவும் இருக்கும்.
காங்கிரஸ்
காங்கிரஸ் கூட்டணியில் இல்லையென்றாலும் திமுக வருத்தப்படாது என கடந்த ஜனவரியில் இவர் பேசியது பெரும் சர்ச்சையானது. அப்போது துரைமுருகனுக்கு காங்கிரஸில் இருந்து மாணிக்கம் தாகூர், மோகன் குமாரமங்கலம் என பலரும் கடுமையாக எதிர்வினையாற்றினர். அதற்கு முன் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தேமுதிகவை சீண்டும் வகையில் கூட்டணி பேச்சுவார்த்தை விவரங்களை பொதுவெளியில் போட்டுடைத்தார் துரைமுருகன்.
ஒருமையில்
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வேலூர் மாவட்டம் வண்டரந்தாங்கலில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தாம் கலந்துகொண்ட கிராம சபை கூட்டம் தொடர்பாக பேசுவதை விடுத்து கூட்டணி பற்றி பேசினார். திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறலாம், சில கட்சிகள் புதிதாக வரலாம் என பொடி வைத்துப் பேசிய அவர், தேர்தல் நேரத்தில் தான் யார் யார் எங்கிருப்பார்கள் என்பதை ஒருமையில் விளித்தார்.
பேச்சைக் குறைக்கவும்
துரைமுருகனின் இந்தப் பேச்சு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்தது. துரைமுருகன் பேசியது ஏற்புடையதல்ல என்றும் எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரையும் ஒருமையும் பேசுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கும் எனவும் அதன் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். இப்படி விவகாரம் வில்லங்கமாக மாறுவதை உணர்ந்த ஸ்டாலின், துரைமுருகனை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
வருத்தம் கோரி
இதையடுத்து சனிக்கிழமை இரவு அவசரம் அவசரமாக வருத்தம் கோரி தமது பேட்டி குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டார் துரைமுருகன். ஆனால் அப்படியும் துரைமுருகன் மீதான மனக்கசப்பு திமுக தோழமைக் கட்சிகளுக்கு மாறவில்லை. அண்ணா, நாவலர் நெஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் பொதுச்செயலாளராக இருந்த இடத்தில் அமர்ந்திருக்கும் துரைமுருகனுக்கு இன்னும் பதவிக்குரிய பக்குவம் வரவில்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
உயர்ந்த பதவி
திமுகவின் 70 ஆண்டுகால வரலாற்றில் துரைமுருகனை போல் அக்கட்சியில் இதற்கு முன் பொதுச்செயலாளர்களாக இருந்தவர்கள் இப்படி வருத்தம் கோரி அறிக்கை வெளியிட்டதில்லை என்பதை அரசியல் ஆய்வாளர்கள் நினைவூட்டுகிறார்கள். கூட்டணி தொடர்பாக பொன்முடி, டி.ஆர்.பாலு ஆகியோரும் கருத்துக்கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் கருத்து நாசூக்காகவும், யாருடைய மனமும் புண்டபாத வகையிலும் உள்ளது. ஆனால் துரைமுருகனிடம் சற்று கடுமையான வார்த்தை பிரயோகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.